திருமலை: திருப்பதியில் கோலாகலமாக நடந்த 3ம் நாள் பிரமோற்சவத்தில் முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார். அப்போது பக்தர்கள் விண்ணதிர ‘கோவிந்தா, கோவிந்தா’ என பக்தி முழக்கமிட்டபடி மனமுருகி வணங்கினர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவ விழா கடந்த 4ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பெரிய சேஷம், சின்ன சேஷம் அன்னப்பறவை வாகனத்தில் எழுந்தருளி உற்சவ மூர்த்திகள் நான்கு மாட வீதியில் வலம் வந்து அருள்பாலித்தனர்.
விழாவின் தொடர்ச்சியாக 3ம் நாள் பிரமோற்சவம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதையொட்டி நேற்று காலை மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காடுகளின் ராஜாவான சிங்கம் மீது அமர்ந்த அவதாரத்தில் சுவாமியை வழிபட்டால் அனைத்து பாவங்களும் நீங்கி மோட்சம் அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் பக்தர்கள் பாவங்கள் நீங்கி மோட்சம் அடைய மனமுருகி வேண்டினர்.
அப்போது, ஜீயர்கள் திவ்ய பிரபந்தங்கள் பாடியபடி வீதி உலாவில் பங்கேற்றனர். மேலும் பல்வேறு மாநிலத்தின் கலாச்சார கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் பாரம்பரிய நடனம், பரத நாட்டியம் ஆடியபடி கலைஞர்கள் வீதி உலாவில் பங்கேற்றனர். தொடர்ந்து நேற்று இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
தன்னுடைய அருள்பெற முத்துப்போல் தூய்மையான பக்தியுடன் இருக்க வேண்டும் என்பதை விளக்கும் வகையில் மலையப்ப சுவாமி முத்துப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். வீதியுலாவின்போது நான்கு மாட வீதியில் இருப்புறமும் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கற்பூர ஆரத்தி எடுத்தும் ‘கோவிந்தா கோவிந்தா’ என விண்ணதிர பக்தி முழக்கத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
* திருப்பதியில் இன்று
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் 4ம் நாளான இன்று கற்பக விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.