திருப்பதி லட்டு விவகாரம் பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்த நடிகை ரோஜா: கணவரை அனுப்பி சமாளித்தார்

பெரம்பூர்: திருப்பதி லட்டு விவகாரம் பூதாகரமாகி உள்ளதால், நடிகையும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்த்தார். மேலும், அவரது கணவரை அனுப்பி சமாளித்தார். கொடுங்கையூர் பகுதியில் ஆர்.கே.செல்வமணி இயக்க உள்ள ‘காந்தியும் அம்பேத்கரும்’ என்ற குறும்படத்தின் பூஜை நேற்று மதியம் நடந்தது. இதில் ஆர்.கே.செல்வமணியின் மனைவியும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான நடிகை ரோஜா கலந்துகொண்டு பூஜையை தொடங்கி வைத்தார். இந்த குறும்படத்தை லலிதா என்பவர் தயாரிக்கிறார்.

பூஜையின் முடிவில் நடிகை ரோஜாவை பேட்டி எடுக்க பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர். இதை அறிந்த ரோஜா திருப்பதி லட்டு விவகாரம் தற்போது பூதாகரமாகி இருப்பதால் அது குறித்து அதிக கேள்விகளை பத்திரிகையாளர்கள் கேட்பார்கள் என அறிந்து, பத்திரிகையாளர் சந்திப்பை தவிர்த்தார். அவருக்கு பதிலாக தனது கணவரான ஆர்.கே.செல்வமணியை பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி கொடுக்கும்படி கூறி அனுப்பி வைத்தார்.

இதை தொடர்ந்து, ஆர்.கே.செல்வமணி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த 10 வருடங்களாக நான் எந்த படத்தையும் இயக்கவில்லை. எனக்கு ஏற்றார் போல் இருந்தால் மட்டுமே படங்களை இயக்குவேன். தற்போது குறும்படம் ஒன்றை இயக்க உள்ளேன். அதற்கான பூஜைதான் தற்போது நடந்தது. காந்தியும் அம்பேத்கரும் என்ற தலைப்பில் இந்த குறும்படம் வரவுள்ளது. இந்த காலகட்டத்தில் காந்தியும் அம்பேத்கரும் தேவை என்பதை வலியுறுத்தி குறும்படத்தை இயக்க உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது