திருமலை: திருப்பதியில் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.2.30 கோடிக்கு வாங்கிய டபுள் டக்கர் பஸ் சில நாட்கள் கூட இயக்கப்படாத நிலையில் ெசகண்ட் சேல்ஸ் செய்ய அறிவிக்கப்பட்டது. யாரும் வாங்க முன்வராததால் குப்பை கொட்டும் இடத்தில் முடங்கி கிடக்கிறது. ஆந்திராவில் கடந்த ஜெகன்மோகன் ஆட்சியின்போது தென்னிந்தியாவில் எங்கும் இல்லாத வகையில் திருப்பதி மாநகரில் இயக்குவதற்காக ரூ.2.30 கோடியில் எலக்ட்ரிக் டபுள் டக்கர் பஸ் வாங்கப்பட்டது. அந்த பஸ்சை வாங்கி சுமார் ஓராண்டாகியும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனை தற்போது குப்பைகளை தரம் பிரிக்கும் இடத்தில் வைத்துள்ளனர்.
இதுகுறித்து திருப்பதி மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், `கடந்தாண்டு அக்டோபர் மாதம் இந்த பஸ்சை அப்போதைய ஆட்சியாளர்கள் வாங்கினர். இந்த பஸ்சை ஆந்திர அரசு ஆர்டிசியிடம் ஒப்படைத்து வாடகை வசூலிக்க திட்டமிட்டது. ஆனால் இதுபோன்ற பஸ்களை இயக்க ஆர்டிசி.க்கு விதிகள் இல்லை என அவர்கள் மறுத்துவிட்டனர். இருப்பினும் கடும் போராட்டத்திற்கு பிறகு உள்ளூரில் பஸ் இயக்கப்பட்டது. கட்டணம் ரூ.50 முதல் என அறிவிக்கப்பட்டது. இதனால் ஒரு நாளைக்கு 10 பேர் கூட அதில் பயணிக்கவில்லை.
அதேவேளையில் தடையை மீறி இந்த பஸ்சை இயக்க கூடாது என ஆர்டிசி எச்சரித்தது. இதனால் இந்த பஸ்சை தொடர்ந்து இயக்க முடியவில்லை. மேலும், குறுகலான சாலைகள் மற்றும் மரக்கிளைகள் இடையூறு இருப்பதால் டபுள் டக்கர் பஸ் திருப்பதிக்கு சாத்தியமில்லை என்ற முடிவில் அதனை ஓரங்கட்டப்பட்டது. இதனால் இந்த பஸ்சை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் செகண்ட் ேஹண்ட்டில் வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை’ என்றார்.