திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் மோசடியை தடுக்க தனி செயலி தயார் செய்யப்பட்டுள்ளது: தேவஸ்தான செயல் அதிகாரி தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் மோசடியை தயாரிக்க தனி செயலி தயார் செய்யப்பட்டுள்ளது என்றுதேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ் தெரிவித்தார்.இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ் அளித்த பேட்டி: தேவஸ்தான அன்னபிரசாத கூட்டத்தில் தினந்தோறும் 2 லட்சம் பேருக்கு தேவையான உணவு தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் அதில் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் மற்றும் அரிசி தரம் குறைந்தும், இயந்திரங்கள் பத்தாண்டுகளுக்கு முன்பு வாங்கியதால் அவை அனைத்தையும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது. இதற்காக சமையல் கலை நிபுணர்களை வரவழைத்து நேரில் பார்வையிட்டு அவர்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

அந்த ஆலோசனைகளின் அடிப்படையில் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பத்தின் உடன் கூடிய சமையலறை புதுப்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பணி புரியும் ஊழியர்களுக்கும் நிபுணர்கள் கொண்டு பயிற்சி வழங்கப்படும். மேலும் பக்தர்களுக்கு சர்வதரிசனம் மற்றும் ஆன்லைனில் வழங்கக்கூடிய டிக்கெட்டுகளில் பல முறைகேடுகள் நடைபெறுவது கண்டறியப்பட்டது. அதில் ஒரே மெயில் ஐடி மற்றும் மொபைல் எண் பயன்படுத்தி ஆதார் எண்ணை மாற்றி போலியாக எண்களை பதிவு செய்து ஒருவரே சுமார் 1500 முதல் 2000 பதிவுகள் செய்து குலுக்கல் முறையில் வழங்கிய சேவை டிக்கெட் 60 முறை பெற்றுள்ளது, புரோக்கர்கள் மெயில், மொபைல் எண் பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து வந்தது கண்டறியப்பட்டது.

இவை தேவஸ்தான தொழில்நுட்ப துறையில் உள்ள மிகப்பெரிய தவறு. அவ்வாறு பெற்றவர்கள் டிக்கெட்கள் ரத்து செய்யப்பட்டு அந்த மொபைல் எண், மெயில் பிளாக் லிஸ்ட்டில் வைக்கப்பட்டுள்ளது. இனி அதுபோன்று நடைபெறாமல் இருப்பதற்காக ஆதார் அமைப்பான உதய் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பேசினோம். அவர்களும் தேவஸ்தானத்திற்கு தனி செயலி ஏற்பாடு செய்ய கேட்டு கொண்டனர். அதற்கு ஏற்ப தேவஸ்தானமும் தனி செயலி தயார் செய்துள்ளோம். இன்னும் சில வாரங்களில் அந்த திட்டம் செயல்படுத்தினால் போலி ஆதார் எண்ணில் மாற்றம் செய்து டிக்கெட்டுகள் பெறுவது முற்றிலும் தடுக்கப்படும். இதனால் போலி ஆதார் எண்ணை மாற்றி யாரும் வர முடியாது. இவ்வாறு செயல் அதிகாரி ஷியாமளாராவ் தெரிவித்தார்.

ரூ.4.25 கோடி காணிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். நேற்று 83,538 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இவர்களில் 30,267 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. இதில் ரூ.4.25 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். இந்நிலையில் விடுமுறை நாளையொட்டி நேற்றிரவு முதல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகள் நிரம்பி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை பக்தர்கள் காத்துள்ளனர். நேர ஒதுக்கீடு டிக்கெட் இன்றி வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரமும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் 3 மணி நேரமும் காத்திருந்து தரிசித்து வருகின்றனர். தொடர்ந்து இன்றிரவு 7 மணியளவில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி தங்க கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி 4 மாடவீதிகளில் வலம் வர உள்ளார்.

Related posts

பொறியியல் படிப்பு துணை கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

சாலைகளில் சுற்றி திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காக என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? மாவட்ட வாரியாக அறிக்கை தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

போராட்டம் தொடர்கிறது; காங்கிரஸில் இணைந்த பின் போகட் பேட்டி..!!