திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது கூடுதல் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் அக்டோபர் 4ம்தேதி முதல் 12ம்தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இவற்றை செயல்அதிகாரி ஷியாமளா ராவ், கூடுதல் செயல்அதிகாரி வெங்கய்யசவுத்ரி ஆகியோர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது செயல் அதிகாரி ஷியாமளாராவ், பிரம்மோற்சவத்தில் 8ம்தேதி கருடசேவையன்று கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

திருமலையில் தற்போது பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 11 ஆயிரம் வாகனங்களை நிறுத்த போதுமான இடம் உள்ளது. இருப்பினும் கருட சேவைக்கு கூடுதல் வாகனங்கள் நிறுத்த திட்டங்களை தயாரிக்க வேண்டும். பாதுகாப்பு, கூடுதல் பணியாளர்கள், சிசிடிவி மற்றும் கூடுதல் லக்கேஜ் சென்டர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும். போதுமான லட்டுகள் நிலுவை வைப்பது, சிறந்த கலைக்குழுக்கள் தேர்வு, கூடுதல் கழிப்பறைகள் போன்றவற்றின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தார்.

12 மணி நேரம் காத்திருப்பு: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று 60,694 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 27,350 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். கோயில் உண்டியலில் ₹3.78 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை முதல் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 13 அறைகளில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்க வேண்டியுள்ளது. ₹300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர்.

Related posts

நெகிழ்ச்சியான நெல் சாகுபடி!

உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு மக்காச்சோளம் கோ 11

அதிரடி லாபம் தரும் ஆர்கானிக் பாக்கு!