Saturday, September 28, 2024
Home » திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையொட்டி கெங்கையம்மன் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையொட்டி கெங்கையம்மன் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

by Lakshmipathi
Published: Last Updated on

*இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

திருப்பதி : திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் முதல் வார செவ்வாய்க்கிழமையொட்டி கெங்கையம்மன் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இன்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. திருப்பதியில் புகழ்பெற்ற கெங்கை அம்மன் கோயில் திருவிழா கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கோலாகலமாக தொடங்கி தினம் ஒரு வேடத்தில் வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர். கடந்த செவ்வாய்க்கிழமை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் நேற்று திருவிழா முடிந்த முதல் வார செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து தங்க முகம் காப்பு அணிவித்தனர்.கோயில் திருவிழாவின் போது பல்வேறு காரணங்களால் வர இயலாதவர்கள் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தி பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மேலும் பக்தர்கள் கடவுள்கள் வேடமிட்டு, தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர். கோயில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நிரம்பி இருந்தனர். புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பிரசாதங்களை கோயில் நிர்வாகத்தினர் வழங்கினார்கள்.

இதேபோல் சித்தூர் முருகான பள்ளி பகுதியில் கெங்கை அம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கெங்கையம்மனுக்கு காப்பு கட்டி தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் நள்ளிரவு 12 மணி அளவில் கெங்கை அம்மனின் சிரசு அனைத்து சாலைகளிலும் ஊர்வலமாக சென்று காலை 6 மணிக்கு அம்மனின் சிரசு அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.

காலை 7 மணி அளவில் அம்மனுக்கு கூழ் ஊற்றுதல் நடைபெற்றது. அதனை அடுத்து மதியம் 3 மணி அளவில் மேல தாளங்களுடன் அம்மனுக்கு கொம்பா கூடு சாத்தி படையல் இடப்பட்டது. மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை நடைபெறும். நேற்று காலை முதல் பக்தர்கள் பொங்கல் வைத்து கூழ் ஊற்றி தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தினர். இன்று புதன்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் கெங்கை அம்மனின் சிரசு இரக்கம் செய்து ஊர்வலமாக அனைத்து சாலைகளில் வழியாக மேளதாளங்களுடன் வான வேடிக்கையுடன் எடுத்துச் சென்று எஸ்டேட் பகுதியில் உள்ள ஏரியில் அம்மனின் சிரசு கரைக்கப்படும். நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் அம்மனுக்கு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து கூழ் ஊற்றி படையல் இட்டு வழங்கினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

You may also like

Leave a Comment

twenty − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi