காஞ்சிபுரம்: திருமங்கலம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாய பணி செய்ய முடியாமல் அவதிக்குள்ளாவதால், திருமங்கலம் ஊராட்சி மன்ற தேர்தல் நடத்த வேண்டும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோரிடம், வார்டு உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா திருமங்கலம் ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் சுரேஷ், எம்.சுரேஷ், காசி, மற்றும் ஊர் பொதுமக்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆகியோரை காஞ்சிபுரத்தில் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தாலுகா 35-திருமங்கலம் ஊராட்சியில் கடந்த உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது பி.அன்பு போட்டியின்றி ஊராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஊராட்சியில் 9 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் உடல்நலக்குறைவால் ஊராட்சி மன்ற தலைவர் அன்பு இறந்துவிட்டார். ஊராட்சி மன்ற (பொ) தலைவராக துணை தலைவர் ரேகா நரேஷ்குமார் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 6 மாதங்கள் ஆகியும் தலைவர் தேர்தல் நடத்தவில்லை. இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அளிக்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்குப்பிறகு மக்களுக்கு பட்டியல் இனத்துக்கு தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது தேர்தல் நடத்தப்படாததால், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாய பணிகள் செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, உடனடியாக திருமங்கலம் ஊராட்சி மன்றத்திற்கு தேர்தல் நடத்தும்படி கூறியுள்ளனர்.