சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கங்களை உருக்கி முதலீடு செய்ததற்கான தங்க முதலீட்டு பத்திரத்தை கோயில் அறங்காவலரிடம், முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 168 கிலோ 68 கிராம் 889 மில்லி கிராம் எடையுள்ள சுத்த தங்கக்கட்டிகள் கோயில் நிர்வாகத்தின் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, மும்பை கிளையில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு ரூ.99,77,64,472 ஆகும். மேற்படி தங்க மதிப்பீட்டிற்கு வழங்கப்படுகின்ற வட்டி வீதம் 2.25 சதவீதம் ஆகும். இதன்மூலம் ஆண்டொன்றுக்கு கிடைக்கப்பெறும் வட்டித் தொகையான ரூ.2.25 கோடி இந்த கோயில் மேம்பாட்டு பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்கான தங்க முதலீட்டு பத்திரத்தை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகனிடம் வழங்கினார்.