கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் டைம் மெஷின் மூலமாக முதுமையை இளமையாக மாற்றுவதாக பொய் வாக்குறுதி அளித்து ரூ.35கோடி மோசடி செய்த தம்பதியரை போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் கான்பூில் உள்ள சாகெட் நகரில் ராஜீவ் குமார் மற்றும் அவரது மனைவி ராஷ்மி துபே ஆகியோர் ஆக்சிஜன் தெரபி மையத்தை தொடங்கியுள்ளனர்.
அவர்கள் டைம் மெஷினுக்குள் ஆக்சிஜன் தெரபி அளிப்பதாகவும் இதன் மூலமாக 65 வயதுடையவர்களின் முதுமையான தோற்றத்தை 25 உள்ளவர்கள் போல இளமையாக மாற்றிவிடுவதாக என்று கூறி வாடிக்கையாளர்களை நம்ப வைத்துள்ளனர். இந்நிலையில் இவர்களிடம் தொடர்ந்து தெரபி சிகிச்சை பெற்றும் இளமை தோற்றத்துக்கு மாறாத ரேணுசிங் என்பவர் போலீசில் புகார் கொடுத்தார்.
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து ரூ.7லட்சம் வரை தங்களை ஏமாற்றிவிட்டதாக அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து தம்பதியரை பிடித்து விசாரணை நடத்தியதில் இதேபோன்று பல வாடிக்கையாளர்களை தம்பதி ஏமாற்றியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் ரூ.35கோடி வரை இருவரும் சேர்ந்து மோசடி செய்துள்ளனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தம்பதியை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.