டைடல் பூங்கா, பள்ளி கட்டிடங்கள், நூலகம் உட்பட ரூ.1,264 கோடியில் திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 36 கோயில்களில் ராஜகோபுரம், விடுதிக்கு அடிக்கல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் பள்ளி கட்டிடங்கள், நூலகங்கள், விழுப்புரத்தில் டைடல் பூங்கா உள்ளிட்ட ரூ.1,264 கோடி திட்ட பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் 36 கோயில்களில் ராஜகோபுரம், விடுதிகள் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து பல்வேறு நலத்திட்ட பணிகளை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார்.

அந்த வகையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 204 கோடியே 57 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ள 1,374 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் 80 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் 270 கட்டிடங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.48.56 கோடி செலவில் பள்ளிக் கட்டிடங்கள், ரூ.3.92 கோடி செலவில் நூலகக் கட்டிடம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் திருச்சி மாவட்டம், நவல்பட்டில் 59.57 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதை திறந்து வைத்தார்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில், 15 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்களுக்கான 13 குடியிருப்புகள், 2 மாவட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் மற்றும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்களுக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. அவற்றை முதல்வர் திறந்து வைத்தார். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், டைடல் நியோ லிமிடெட் மூலமாக விழுப்புரம் மாவட்டம், திருச்சிற்றம்பலத்தில் சுமார் 500 தகவல் தொழில் வல்லுநர்கள் பணிபுரியும் வகையில் 31 கோடி ரூபாய் செலவில் மினி டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 29.93 கோடி ரூபாய் செலவில் காசநோய், நெஞ்சக மருத்துவம் மற்றும் தொற்று நோய் பிரிவுக் கட்டிடம், வணிகவரி, பதிவுத்துறை சார்பில் ரூ.25 கோடியே 15 லட்சம் செலவில் வணிகவரி அலுவலகக் கட்டிடங்கள், ரூ.3 கோடியே 62 லட்சம் செலவில் சார்பதிவாளர் அலுவலகக் கட்டிடங்கள் என ரூ.502 கோடியே 51 லட்சத்தில் கட்டப்பட்டவற்றை முதல்வர் திறந்தார். மேலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் பவானியம்மன்கோயிலில் ரூ.159 கோடியில் பக்தர்களுக்கு ஒருங்கிணைந்த அடிப்படை வசதிக்கான பணிகள், மயிலாப்பூர், கபாலீசுவரர் கோயிலில் ரூ.28.76 கோடியில் ஆன்மிக கலாச்சார மையம், காஞ்சிபுரம், ஏகாம்பரேஸ்வரர் கோயில் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள சென்னை, ஏகாம்பரநாதர் மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கு ரூ.11.15 கோடியில் வகுப்பறை கட்டிடம், சென்னை, பூங்காநகர் முத்துக்குமாரசுவாமி தேவஸ்தான கோயில், தேனாம்பேட்டை, பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆலையம்மன் திருக்கோயில், மயிலாப்பூர், திருவள்ளுவர் கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நாகேச்சரசுவாமிகோயில், சென்னை, தங்கசாலை தெரு, பிரசன்ன விநாயகர் கோயில், சென்னை, வேளச்சேரி தண்டீஸ்வரர் கோயில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் நந்தீஸ்வரர் கோயில்களில் ராஜகோபுரம், திருமண மண்டபங்கள், விடுதி, வணிக வளாகங்கள், பக்தர்கள் இளைப்பாறும் மண்டபம், பல்நோக்கு மண்டபம், வசந்த மண்டபம் என 36கோயில்களில் ரூ.592.38 கோடியிலான 43 புதிய திட்ட கட்டுமான பணிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் இன்போசிஸ் அறக்கட்டளை சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து ரூ30 கோடி மதிப்பீட்டில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் அரசு கஸ்தூரிபா காந்தி தாய்-சேய் நல மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, அம்மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்காக வழங்கினார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது