திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூரில் அடர்வனத்தைவிட்டு வெளிவந்த காட்டு யானை ஒன்று மக்கள் குடியிருப்புகளில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரளாவில் திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அடர் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டுயானை ஒன்று வெட்டிலபாறை கிராமத்திற்குள் நுழைந்தது. சாலைகளில் அங்கும் இங்குமாக யானை வலம் வந்ததால் மக்கள் அலறியடித்து ஓடினர்.
இதனால் வெட்டிலபாறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்குள்ள வீடு ஒன்றின் தோட்டத்தில் நுழைந்த யானை தென்னை மரங்களை கீழே தள்ளி ஆக்ரோஷமாக பிளிறியபடி இருந்தது. இது குறித்த பொதுமக்களின் புகாரை அடுத்து விரைந்து வந்த வனத்துறையினர். யானையை காட்டுக்குள் விரட்ட தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேர முயற்சிக்கு பிறகு காட்டு யானை அடர்வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்கப்பட்டது. இதனால் வெட்டிலபாறை பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.