தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் வருமானவரித்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், சார்பதிவாளர் அலுவலகங்கள் என பொதுமக்கள் முதலீடு செய்யும் நிறுவனங்கள் தொடர்பான விவகாரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இதுபோன்ற நிறுவனங்கள், வருமான வரித்துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி பரிவர்த்தனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டப்படுகிறதா? என்று ஆய்வு செய்து அவர்களை கண்காணிக்கும் பணி என்பது வருமான வரித்துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. மேலும், கண்காணிப்பதோடு மட்டுமின்றி முறையாக கணக்குகாட்டவில்லை எனில் அவற்றை சோதனை நடத்தி அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் வருமான வரித்துறைக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் அதிரடி சோதனையை வருமானவரித்துறை நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

தூத்துக்குடியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 5 வாகனங்களில் வந்த 16 வருமான வரித்துறை அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 10.30 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை தற்போது வரை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நிதி பரிவர்த்தனை அறிக்கையை முறையாக கணக்கு காட்டாத காரணத்தினால் உயர் அதிகாரிகள் தலைமையில் சோதனை நடைபெறுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக வைப்புத் தொகைக்கு மக்களுக்கு தர வேண்டிய வட்டிகள், பங்கு ஈவுத்தொகையில் குறைபாடுடன் கணக்கு காட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிர்வாக இயக்குனர் மற்றும் சிஇஓ கிருஷ்ணன் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அலுவலகத்திற்கு வருபவர்கள் உள்ளே அனுமதிக்கப்படாமல், வங்கி ஊழியர்கள் மட்டுமே மிகுந்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை பொறுத்தவரை 1921ம் ஆண்டு துவங்கி தமிழகம் முழுவதும் தற்போது 500க்கும் மேற்பட்ட கிளைகளை அமைத்து செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்த வங்கியில் வருமான வரித்துறை சோதனை என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு