தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் நாளை(டிச.27) முதல் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது. கடந்த 17, 18 தேதிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட நாட்டு படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்பிடித் துறைமுகத்தில் மீன்வளத்துறை அறிவித்திருந்தது. மேலும் நடுக்கடலில் மீன் பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பும் படி மீன்வளத்துறை வலியுறுத்தி இருந்தது.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதனால் அங்குள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் உள்ளனர். கடலுக்கு செல்லாததால் மீன்பிடி துறைமுகத்தில் 272 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி அளித்து மீன்வளத்துறை அறிவித்துள்ளது.