Sunday, September 29, 2024
Home » திருவிடைமருதூரில் சிறுவனை ஆற்றில் தள்ளி கொலை: போதை நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

திருவிடைமருதூரில் சிறுவனை ஆற்றில் தள்ளி கொலை: போதை நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல்

by Arun Kumar

 

திருவிடைமருதூர், ஜூலை 25: தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் மாதா கோவில் தெரு பகுதியை சேர்ந்த ஸ்டாலின் மகன் ரோஜர் (2). இச்சிறுவன் அப்பகுதியில் கடந்த 19ம் தேதி இரவு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அவ்வழியாக மது அருந்திவிட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் மகன் பிரடிக் சாம்சன் (22) என்பவர் அச்சிறுவனை தனது பைக்கில் ஏற்றிச்சென்றுள்ளார். கீழ தூண்டில்விநாயகம் பேட்டை டாஸ்மாக் கடை அருகே வீரசோழன் ஆற்றுக்கரையில் சென்ற போது நிலை தடுமாறி சாம்சன் பைக்குடன் ஆற்றில் விழுந்தார்.

பின்னர் சாம்சன் மட்டும் ஆற்றில் இருந்து நீந்தி வெளியேறி உள்ளார். ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவனின் உடல் 10 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினரால் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக சாம்சனை போலீசார் கைது செய்யாமல் தப்பிக்க விட்டதாகவும், சிறுவனை ஆற்றில் தள்ளி கொலை செய்த அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை குழந்தையின் உறவினர்கள், பெற்றோர்கள், நண்பர்கள், கிராம மக்கள் என 200 பேர் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் தாலுகா அலுவலகம் முன்பு திடீர் மறியலில் ஈடுபட்டனர். தாசில்தார் சுசீலா, டிஎஸ்பி ஜாபர் சித்திக் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதுகுறித்து சிறுவனின் தந்தை ஸ்டாலின் திருவிடைமருதூர் போலீசில் கொடுத்துள்ள புகாரில், விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை பிரிடிக் சாம்சன் கடத்தி சென்றுள்ளார். அவர் எங்களுக்கு எந்தவொரு உறவினரும் கிடையாது. திட்டமிட்டு குழந்தையை ஆற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார், ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்கை மாற்றம் செய்து சாம்சனை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்தனர். அதன் பேரில் 3 மணி நேரத்திற்கு பிறகு மறியல் கைவிடப்பட்டது.

You may also like

Leave a Comment

four × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi