திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வைத்து உயிர்பிரிய வேண்டும் என ஆசைப்பட்ட பெண்ணை அங்கு வைத்தே கழுத்தறுத்து கொன்றதாக போலி சாமியார் ஒருவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் கொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏரியில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கிடந்துள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் கொல்லப்பட்டவர் ஸ்ரீபெரம்பத்தூர் அருகே மலைப்பாக்கத்தை சேர்ந்த 50 வயதான அலமேலு என்பது தெரியவந்தது.
சிசிடிவி கட்சிகளின் அடிப்படையில் சென்னை குன்றத்தூரில் பதுங்கி இருந்த 68 வயதான போலி சாமியார் தட்சன் என்பவரை கண்ணமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் போலீசாரை திடுக்கிட செய்தது. கண்ணமங்கலம் அருகே ரெட்டிபாளையத்தை பூர்விகமாக கொண்ட தட்சன் மலைப்பாக்கதில் அலமேலு வீட்டிற்கு எதிரே வசித்து வந்துள்ளார்.
கணவனை இழந்த அலமேலு 3 பிள்ளைகளின் வீட்டிற்கும் செல்லாமல் தனியாக வாழ்ந்து வந்த நிலையில் தட்சன் மற்றும் சில குழுவினருடன் சேர்ந்து ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டியதாக கூறப்படுகிறது. வாழ்க்கையில் மோட்சம் அடைய திருவண்ணாமலையில் தான் தனது உயிர் பிரிய வேண்டும் என அலமேலு கூறியதாக தெரிவித்த தட்சன் அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் கண்ணமங்கலம் பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்தார்.