திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாபசுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கோயில் வளாகத்திலுள்ள நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ஊழியர்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி விருந்து அளிக்கப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயிலில் பணிபுரியும் ஒரு ஊழியரின் மகனுக்கு வேலை கிடைத்ததால், அவர் சக ஊழியர்களுக்கு இந்த பிரியாணி விருந்து அளித்ததாக கூறப்படுகிறது.
கோயில் வளாகத்திற்குள் மாமிச உணவு பரிமாறப்பட்டது பத்மநாபசுவாமி கோயில் பக்தர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி பத்மநாபசுவாமி கோயில் தலைமை தந்திரி கோவிந்தன் நம்பூதிரிப்பாடு கோயில் நிர்வாக குழுவிற்கும், திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினருக்கும் புகார் அளித்துள்ளார்.