பாலமுருகனடிமை சுவாமிக்கு திருவள்ளுவர் விருது: பத்தமடை பரமசிவத்துக்கு அண்ணா விருது, உ.பலராமனுக்கு காமராசர் விருது, தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கும், அண்ணா விருது பத்தமடை பரமசிவத்துக்கும், காமராசர் விருது உ.பலராமனுக்கும் வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கு தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து, அவர்களின் தமிழ்த்தொண்டுக்கு பெருமை சேர்த்து வருகிறது.

அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கு 1983ம் ஆண்டில் இருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவ செல்வங்களுக்கு விழா எடுத்து ரூ.3 லட்சம் பரிசு வழங்கியும், உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ் தொண்டாற்றி வரும் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024ம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது. பேரறிஞர் அண்ணாவின் முதன்மை தொண்டர் என பாராட்டப்பட்டவரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவத்துக்கு 2023ம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினை வழங்குகிறது.

தேசிய தமிழ் கவிஞர் பேராயம், சிலப்பு செல்வர் ம.பொ.சி அவர்களை கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளை தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான உ.பலராமனுக்கு 2023ம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது. மேலும், தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளை படைத்த கவிஞர் பழனி பாரதிக்கு 2023ம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதினை வழங்குகிறது.

முத்தமிழறிஞர் கலைஞரால் முத்தரசனாரின் “கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்” என்று பாராட்டை பெற்றவரும் தமது 92வது அகவையிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ் பணியாற்றி வரும் எழுச்சி கவிஞர் ம.முத்தரசுக்கு 2023ம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வழங்குகிறது.

பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களை திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ்.ஜெயசீல ஸ்டீபனுக்கு 2023ம் ஆண்டுக்கான தமிழ் தென்றல் திரு.வி.க. விருதினை வழங்குகிறது.தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா.கருணாநிதிக்கு 2023ஆம் ஆண்டுக்கான முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருதினை வழங்குகிறது.

விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருது தொகையாக ரூ.2 லட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்படுவார்கள். இந்த விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவிப்பார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் நடத்திய பெண் மேலாளர் கைது: உரிமையாளருக்கு வலை

வீட்டு வாசலில் தூங்கிய 70 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: 20 வயது ஆட்டோ ஓட்டுனர் கைது

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு