திருவள்ளூர் மாவட்டம் குந்தம்பாக்கத்தில் ரூ.500 கோடியில் 152 ஏக்கரில் திரைப்பட நகர்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று சென்னை தரமணி, தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் புதிய படப்பிடிப்பு தளங்கள் அமையவுள்ள இடங்களை நேரில் பார்வையிட்டார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சென்னை எம்ஜிஆர் திரைப்பட நகரத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்று முடிவு பெற்றிருக்கிறது, சில பணிகள் நடைபெற இருக்கின்றது. திரைப்பட நகரத்தில் உள்ள படப்பிடிப்பு தளம் பழுதடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டு ரூ.5 கோடி செலவில் குளிர்சாதன வசதியுடன் படப்பிடிப்பு தளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது படப்பிடிப்பு நடத்துவதற்காக 3 புதிய தளங்களை கொண்ட அரங்கங்கள் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இடங்கள் இறுதி செய்யப்பட்டு 3 புதிய படப்பிடிப்பு தளங்கள் பணிகள் ரூ.39 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கிண்டியில் 06.01.2024 அன்று நடைபெற்ற “கலைஞர் 100” விழாவில், தென்னிந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய அதிநவீன திரைப்பட நகரம் ரூ.500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பினை நிறைவேற்றும் பொருட்டு, திருவள்ளூர் மாவட்டம், குத்தம்பாக்கத்தில் சுமார் 152 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும் அந்த இடத்தை பார்வையிட்டு இருக்கிறார். விரைவில் பணிகள் துவங்க இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். சந்திப்பின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் ராஜாராமன், பொதுப்பணித்துறை மற்றும் செய்தி துறை அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு