திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்த கேட்டர்பில்லர் நிறுவனம் ரூ.500 கோடி முதலீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து

*இதுவரை ரூ.7016 கோடிக்கு 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சென்னை: அமெரிக்காவின் சிகாகோவில், கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் ரூ.500 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இதன்படி, கேட்டர்பில்லர் நிறுவனம் தமிழகத்தில் திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்த உள்ளது. இதனால் தமிழகத்தில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இதுவரை முதல்வரின் அமெரிக்க பயணத்தில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7016 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்ற உயரிய இலக்கை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்து, அந்த இலக்கை அடைவதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டிற்கு அதிக அளவிலான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 27ம் தேதி முதல் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த பயணத்தின் போது, முதல்வர் முன்னிலையில் அமெரிக்க நாட்டின் சான் பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் 7016 கோடி ரூபாய் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (11.9.2024) அமெரிக்காவின் சிகாகோவில், கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே, முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் விவரம்: கேட்டர்பில்லர் நிறுவனம், கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள், ஆப்-ஹைவே டீசல் மற்றும் இயற்கை எரிவாயு இயந்திரங்கள், தொழில்துறை எரிவாயு விசையாழிகள் மற்றும் டீசல்-எலக்ட்ரிக் இன்ஜின்கள் ஆகியவற்றின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம் பார்ச்சூன் 500 நிறுவனங்களில் ஒன்றாகும்.

இந்நிறுவனம் கட்டுமானத் தொழில்கள், வளத் தொழில்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து, நிதி தயாரிப்பு பொருட்கள் ஆகிய 4 வணிகப் பிரிவுகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கேட்டர்பில்லர் நிறுவனம் டிராக்டர்கள் முதல் ஹைட்ராலிக் அகழ்வாராய்ச்சிகள், பேக்ஹோ ஏற்றிகள், மோட்டார் கிரேடர்கள், ஆப்-ஹைவே டிரக்குகள், வீல் லோடர்கள், விவசாய டிராக்டர்கள் மற்றும் இன்ஜின்கள் ஆகியவற்றின் இயந்திரங்களை தயாரித்து வருகின்றன.

இந்த இயந்திரங்கள் கட்டுமானம், சாலை அமைத்தல், சுரங்கம், வனவியல், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் பொருட்களை கையாளும் தொழில்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் டெக்சாஸில் உள்ள இர்விங்கில் அமைந்துள்ளது. இத்தகைய கேட்டர்பில்லர் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில், திருவள்ளூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தற்போதுள்ள கட்டுமான கருவிகள் உற்பத்தி நிலையங்களை விரிவுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில், கேட்டர்பில்லர் நிறுவனத்தின் இயக்குநர் புவன் அனந்தகிருஷ்ணன், முதுநிலை துணைத் தலைவர் கெர்க் எப்லர் மற்றும் உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் அருண் ராய், தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் விஷ்ணு, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை திரும்புகிறார்
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக கடந்த மாதம் 27ம் தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின்போது, தொழில்துறை அமைச்சர், அதிகாரிகள் உடன் சென்றனர். அமெரிக்காவில் முதல்வர் முன்னிலையில் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோவில் உலகின் 16 முன்னணி நிறுவனங்களுடன் ரூ.7,516 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, உலகளவில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் புதிய தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

முக்கியமாக கடந்த 10ம் தேதி சிகாகோவில், போர்டு மோட்டார் நிறுவனத்தின் உயர் அலுவலர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து, தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து அமெரிக்கவாழ் தமிழர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு சந்திப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். முதல்வரின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் பலத்த வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் வெற்றிகரமான பயணத்தை முடித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று மாலை அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். சுமார் 18 மணி நேர பயணத்துக்கு பிறகு நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சென்னை, விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் தமிழக அமைச்சர்கள், திமுக முன்னணி நிர்வாகிகள் திரளாக கூடி முதல்வரை வரவேற்கின்றனர்.

Related posts

ஊட்டி – குன்னூர் சாலையில் ஒய்யாரமாக வலம் வந்த காட்டு மாடு

கடல்சார் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் ராமேஸ்வரம்-கன்னியாகுமரிக்கு படகு சவாரி: ₹13 கோடியில் மிதவை ஜெட்டி பாலமும் அமைகிறது

அருமனை அருகே குளித்த போது தண்ணீர் இழுத்து சென்றது; இரவு முழுவதும் ஆற்றின் நடுவே இருந்த பாறையில் தூங்கிய போதை வாலிபர்: இறந்ததாக நினைத்து தேடிய தீயணைப்புத்துறையினர்