திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே காக்களூர் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் பெயிண்ட் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இங்கு பணிபுரியும் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீயை தீ விபத்தில் மேலும் சிலர் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தத் தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தத் தீ விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூரில் பெயின்ட் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படி பெயிண்ட் தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் மேலும் 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன்படி இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பெயிண்ட் தொழிற்சாலையில் இருந்து மேலும் ஒருவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் எனச் சொல்லப்படுகிறது. பெயிண்ட் தொழிற்சாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது.