திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகிபாபு நேற்று சாமி தரிசனம் செய்து வழிபட்டார். சென்னையில் இருந்து காரில் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்த நடிகர் யோகிபாபுக்கு, கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்று சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மூலவர், வள்ளி, தெய்வானை, உற்சவர், சண்முகர், ஆபத்சகாய விநாயகரை தரிசனம் செய்து வழிபட்டார். அவருக்கு, கோயில் சார்பில் மலர்மாலை அணிவித்து விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் திருத்தணி முருகன் கோயிலுடன் இணைந்த மத்தூர் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோயிலில் விளக்கேற்றி அம்மனை தரிசனம் செய்தார்.