திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பக்தர்களின் தலைமுடி காணிக்கை சேகரிக்கும் உரிமம் ரூ.53.62 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் பிரசாதக்கடை நடத்துதல், பக்தர்களின் தலைமுடி காணிக்கை சேகரிப்பு, நெய் தீபம் விற்பனை, வாகன நிறுத்த கட்டணம், ஆடு மற்றும் கோழி சேகரித்தல், தேங்காய், உப்பு, மிளகு சேகரித்தல், வெள்ளி உரு விற்பனை, கடை வாடகை வசூல் ஆகியவற்றுக்கான ஏலம் கடந்த வாரம் கோயில் அலுவலகத்தில் நடைபெற்றது.
அப்போது, தலைமுடி காணிக்கை சேகரிப்புக்கான ஏலத்தொகை குறைவாக கேட்கப்பட்டதால் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதிதாசன், செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் இதற்கான ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த, ஏலத்தில் பக்தர்களின் காணிக்கை தலைமுடி சேகரிக்கும் உரிமத்திற்கான ஏலம் 53 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய்க்கு விடப்பட்டது.