திருமாவளவன் பேசிய வீடியோவால் பரபரப்பு: தனக்கு தெரியாது என கூறிய சிறிது நேரத்தில் மீண்டும் வெளியானதால் சர்ச்சை

சென்னை: திருமாவளவன் பேசிய வீடியோ மீண்டும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. கள்ளக்குறிச்சியில் அடுத்த மாதம் 2ம் தேதி மது-போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு அதிமுக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன், மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவை அழைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகி உள்ளது. இந்த மது ஒழிப்பு மாநாடு அரசியல் கட்சிகளின் கூட்டணியில் ஒருவித மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் ஆட்சி, அதிகாரம் குறித்து தான் பேசிய பழைய வீடியோவை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் திடீரென பகிர்ந்தார். வீடியோவை பதிவிட்ட சிலமணி நேரங்களிலேயே அது எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கப்பட்டது. திருமாவளவன் திடீரென ஆட்சி, அதிகாரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு, பின்னர் நீக்கிய விவகாரம் அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவை பகிர்ந்து, பின்னர் நீக்கியது குறித்து சென்னை விமான நிலையத்தில் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘‘வீடியோ பதிவை அட்மின் வெளியிட்டு இருக்கலாம். அதுபற்றி எனக்கு தெரியாது. அவரிடம் விசாரித்து சொல்கிறேன். ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்பது நீண்டகாலமாக நாங்கள் வைக்கும் கோரிக்கைதான். புதிதாக எதையும் சொல்லவில்லை” என்றார்.

Related posts

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!

MSME தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

ஜம்மு-காஷ்மீர் முதல்கட்ட தேர்தலில் மாலை 5 மணி வரை 58.19 சதவீத வாக்குகள் பதிவாகின