திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் திருப்பதி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏவுமான கருணாகர் ரெட்டி நேற்றுமாலை ஏழுமலையான் கோயில் தெப்பக்குளத்தில் புனித நீராடி கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டம் அருகே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றினார். மேலும் கற்பூரத்தை கையில் ஏந்தி நான் தலைவராக இருந்தபோது நெய்யில் கலப்படம் செய்திருந்தால் எனது குடும்பமே அழிந்து போகட்டும் என உறுதிமொழி எடுத்தார். அப்போது திருமலையில் அரசியல் பேசக்கூடாது என்பதால் உடனடியாக போலீசார் அவரை தடுத்து திருப்பதிக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நிருபர்களிடம் கருணாகர ரெட்டி கூறியதாவது: முதல்வர் சந்திரபாபு நாயுடு பெரிய தவறு செய்துவிட்டார். தனது அரசியலுக்காக ஏழுமலையானை பயன்படுத்திக் கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் உண்மை தெரிய வேண்டுமென்றால் சி.பி.ஐ அல்லது சுப்ரீம் கோர்ட்டில் உள்ள நீதிபதியை வைத்து விசாரணை நடத்த வேண்டும். அறங்காவலர் குழு எந்த தவறும் செய்யவில்லை. லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மீன் எண்ணெயும், மாட்டு, பன்றிக் கொழுப்பும் கலந்ததாக தேவஸ்தான செயல் அதிகாரியை கூற வைத்துள்ளனர். சந்திரபாபுவுக்கு மூளையில் வன்மம் நிறைந்துள்ளது. சமூக வலைதளத்தில் லட்டு பிரசாதம் குறித்து தவறான பிரச்சாரத்தை பரப்பினார்கள்.