சென்னை: சென்னை தியாகராய நகரில் பிரபல நகைக்கடையில் ரூ.1 கோடியே 84 லட்சம் மதிப்பிலான தங்க, வைர, நகைகள் மயமான விவகாரத்தில் ஊழியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலையில் பிரபல தங்க, வைர நகைகளின் மொத்த விற்பனை நிறுவனத்தின் இயக்குனர் கவுதம் சந்துபோத்ரா பாண்டிபஸார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கொல்கத்தாவை சேர்ந்த பிரபல நிறுவனத்திலிருந்து மொத்தமாக தங்க, வைர நகைகளை வாடிக்கையாக இறக்குமதி செய்து கொண்டிருந்ததாகவும் அந்நிறுவனத்தின் மேலாளர் ப்ரீத்தம் ரூ.1.84 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகளை திருடியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். விசாரணை நடத்தி மேலாளர் ப்ரீத்தம் மற்றும் கடை ஊழியர்கள் பிரதீப்,அருண் உட்பட 5 பேரை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 259 கிராம் தங்க நகை, வைரம், ரூ.7 லட்சம் ரொக்கம் ஒரு கார், பைக் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. திருடிய தங்கம் மற்றும் வைரத்தை வைத்து மேற்கு வங்காளத்தில் மேலாளர் ப்ரீத்தம் வீடு ஒன்று கட்டியதும் மயிலாடுதுறையில் கடை ஊழியர் பிரதீப் நிலம் வாங்கி போட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய மீதமுள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.