சேந்தமங்கலம்: அங்கன்வாடி பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிருபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டார அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் 18 பேர், நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணனிடம் நேற்று முன்தினம் (25ம் தேதி) ஒரு மனு அளித்தனர். அதில், ‘சேந்தமங்கலம் ஜங்களாபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி (46), நாளிதழ் ஒன்றில் ஏஜென்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த நாளிதழின் பகுதி நேர நிருபராகவும் உள்ளார். நாங்கள் பணிபுரியும் அங்கன்வாடி மையத்திற்கு வந்து, ஜன்னல் வழியாக ஒளிந்திருந்து எங்களை படம் எடுத்தார். அதை நாங்கள் தட்டிக் கேட்ட போது, ஆபாச வார்த்தைகளால் பேசினார்.
அவருக்கு மாதாமாதம் பணம் தர வேண்டும் எனக் கேட்டு, நெருக்கடி கொடுத்து வருகிறார். பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருகிறார். மேலும், அங்கன்வாடி மையத்திற்கு அடிக்கடி வந்து இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசி, பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு நாமக்கல் மாவட்ட எஸ்பி ராஜேஷ்கண்ணன் சேந்தமங்கலம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில், சேந்தமங்கலம் எஸ்ஐ பிரியா வழக்குப்பதிந்து பெரியசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.