இன்று பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பல வகையான ஸ்நாக்ஸ் அயிட்டங்கள் கடைகளில் விற்கப்படுகின்றன. பார்க்கும்போது பளபளப்பாக தெரியும் அந்த ஸ்நாக்ஸ் அயிட்டங்களை நமது குழந்தைகள் விரும்பி வாங்கி சாப்பிடுகிறார்கள். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை தீமை மிகுந்தது என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. குழந்தைகள் அப்படித்தான் என்றால் பல பெரியவர்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. இதுபோன்ற பொருட்களால் குழந்தைகளுக்கு பல்வேறு உடல் நலப்பிரச்னைகள் உருவாகின்றன. பாக்கெட்டில் அடைத்து விற்கும் நொறுக்குத்தீனிகள் புற்றுநோயைக்கூட உருவாக்கக்கூடியவை என எச்சரிக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். ஆனால் அதை நாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் நமது குழந்தைச் செல்வங்களின் எதிர்காலத்தோடு விளையாடுகிறோம். இதுபோன்ற ஆபத்தான நொறுக்குத்தீனிகளின் தன்மைகளை உணர்ந்த பலர் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் செய்த ஆரோக்கிய நொறுக்குத்தீனிகளை வழங்கி வருகிறார்கள். இன்னும் சிலர் நமது மண்ணில் விளையும் சிறுதானியம் உள்ளிட்ட ஆரோக்கிய விளைபொருட் களைப் பயன்படுத்தி சுவையான நொறுக்குத்தீனிகளைத் தயாரித்துக் கொடுக்கிறார்கள்.
நமது முன்னோர் பெரும்பாலும் தங்களது குழந்தைகளுக்கு ஆரோக்கியமான நொறுக்குத்தீனிகளையே வீட்டில் தயாரித்து கொடுத்து மகிழ்ந்து இருக்கிறார்கள். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களில் இப்போது நாம் ஜிலேபி, லட்டு போன்ற இனிப்பு வகைகளை வீட்டில் தயாரித்துச் சாப்பிடுகிறோம். இன்னும் சிலர் பெரிய பெரிய ஸ்வீட் ஸ்டால்களுக்குச் சென்று உயர்தரமான தயாரிப்பில் உருவாகும் இனிப்பு வகைகளை வாங்கி வந்து சாப்பிடுகிறார்கள். ஆனால் இதுபோன்ற பண்டிகை தினங்கள் நாம் பெரும்பாலும் முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட பலகாரங்களைத்தான் செய்து சாப்பிட்டு வந்திருக்கிறோம். தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன்பே கூட பலகார வகைகளைச் செய்யத் தொடங்கி விடுவார்கள். முறுக்கு, அதிரசம் மட்டும் இல்லாமல் பொரிவிளங்கா உருண்டை, மிட்டாய் உருண்டை, ரவா உருண்டை, எள்ளடை, சிலேப்பி, சீடை, காராசேவு, காராபூந்தி, போளி போன்று பல்வேறு வகைப் பலகாரங்களையும் செய்யத் தொடங்கிவிடுவார்கள். அதிலும் குறிப்பாக முறுக்கில் பல வகைகளைச் செய்து அசத்துவார்கள். அவரவர் வசதிக்கேற்பவும். சுவைக்கேற்பவும், வயதுக்கேற்பவும் கீழ்க்கண்ட முறுக்கு வகைகளை இன்னும் செய்து வருகிறார்கள். அரிசி முறுக்கு, வரகரிசி முறுக்கு, கைமுறுக்கு, அச்சுமுறுக்கு, முள்முறுக்கு, ஓமப்பொடி முறுக்கு, இனிப்பு முறுக்கு என நீளும் அந்த முறுக்கு வகைகளைப்பற்றி இங்கு காண்போம்.
அரிசி முறுக்கு
அரிசி மாவுடன், பாசிப்பருப்பு (அ) கடலைப்பருப்பு ஆகியவற்றின் மாவைக் கலந்து செய்யப்படும் முறுக்கே அரிசி முறுக்கு. இதுதான் பலரது வீடுகளில் பரவலாக செய்யப்படும் முறுக்கு வகை. பண்டிகை காலம் மட்டுமின்றி வீட்டில் நடக்கும் பல்வேறு விசேஷங்களுக்கும் இந்த முறுக்குதான் தயாரித்துக் கொடுக்கப்படுகிறது. முறுக்குக் குவளை கட்டிக்கொண்டு செல்வது ஒரு பெருமிதமான விசயமாக கிராமப்புறங்களில் பார்க்கப்படும்.
வரகரிசி முறுக்கு
நெல்லரிசிக்குப் பதிலாக வரகு அரிசியின் மாவைப் பயன்படுத்தி முறுக்கு செய்வது முன்பு வழக்கில் இருந்திருக்கிறது. அரிசி முறுக்கை விடச் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இந்த வரகரிசி முறுக்கு இருக்கும் என வயதான தகவலாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
கைமுறுக்கு
முறுக்கு அச்சுகளைப் பயன்படுத்தாமல் கையாலேயே செய்யப்படும் முறுக்கு கை முறுக்கு எனப்படும். இந்த வகை முறுக்கை தீபாவளி தவிர பிற நாட்களிலும் செய்து ஒரு சிலர் விற்பதும் உண்டு.
முள்முறுக்கு
முறுக்குத் தண்டுகளின் வெளிப்புறம் சிறு முட்கள் போன்ற அமைப்புடைய முறுக்கே முள்முறுக்கு என்று சிறுவர்களால் அழைக்கப் படுகிறது. இது சாப்பிடுவதற்குக் கரகர மொறுமொறு தன்மையுடன் இருப்பதால் பலர் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
ஓமப்பொடி முறுக்கு
முறுக்கு மாவில் ஓமம் கலந்து மெல்லிய தண்டுகள் அமையும்படியான அச்சைக் கொண்டு செய்யப்படும் முறுக்கே ஓமப்பொடி எனப்படும். இது குழந்தைகளுக்காகவும், வயதானவர்களுக்காகவும் செய்யப்படும் முறுக்கு ஆகும். சிறுவர்களுக்கு எளிதில் சீரணமாகும் என்பதாலும் வயதானவர்கள் (பல் இல்லாதவர்களும்) எளிதில் மென்று தின்னலாம் என்பதற்காகவும் செய்யப்படுவதாகும்.கிராமப்புறங்களில் ஓமப்பொடி முறுக்கு குறித்து ஒரு வழக்காறு நடைமுறையில் இருக்கிறது. முறுக்கு தின்னா கிறுக்கு வரும் என பொதுவாக சொல்லப்படுவதும் உண்டு.
இனிப்பு முறுக்கு
வழக்கமாகச் செய்யப்படும் முறுக்கு மாவில் இனிப்பு (சர்க்கரை) கலந்து சிலர் செய்கின்றனர். இது இனிப்பு முறுக்கு எனப்படும். ஆனால் முறுக்கில் இனிப்புச்சுவை இருப்பதை பெரும்பாலானவர்கள் விரும்புவது இல்லை.
அச்சு முறுக்கு
வழக்கமாக முறுக்கு செய்யப்படும் முறுக்கு அச்சு போன்று அல்லாமல் பூப்போன்ற வடிவில் ஒருவிதமான முறுக்கு செய்யப்படுவது உண்டு. அதுவே அச்சு முறுக்கு எனப் படும். அச்சு முறுக்கு குறித்து நிறைய திரைப்பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன.
அதிரசம்
முறுக்கு போலவே அதிரசமும் தமிழர்களால் விரும்பிச் சாப்பிடப்படும் பலகாரமாக இருக்கிறது. பலகாரம் என்றாலே பெரும் பாலும் முறுக்கும் அதிரசமும்தான் என்ற நிலை இன்றும் கிராமப்புறங்களில் நிலவிவருகிறது. அரிசிமாவை வெல்லப்பாகில் கிளறி அதை இரண்டு மூன்று நாள் வைத்திருந்து (பதப்படுத்தி) அடைபோல் தட்டி எண்ணெயில் வேகவைத்து எடுப்பதே அதிரசம் ஆகும். இதை சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.
பொரிவிளங்காய் உருண்டை
அரிசி மாவில் தேங்காய்ப்பால், பொட்டுக் கடலை, மணிலாப்பயறு ஆகியவற்றைக் கலந்து பாகில் கொட்டிக் கிளறி பச்சரிசி மாவைத் தொட்டு உருண்டையாக பிடிப்பதே பொரிவிளங்காய் உருண்டை. இதை சிலர் பொருள் விளங்கா உருண்டை என கூறுவதுண்டு. பல் உறுதியாக உடையவர்களே இதனை சாப்பிடுவார்கள். பொரிவிளங்காய் உருண்டை செய்யப்படும் வழக்கம் இப்போது அருகி வருகிறது. இதேபோல காராசேவு, காராபூந்தி, மிட்டாய் உருண்டை, சிலேப்பி போன்றவை அண்மைக் காலமாகவே செய்யப்படும் பலகார வகைகளாக இருக்கின்றன.
– ரத்தின புகழேந்தி.