மதுரை: மைசூரைச் சேர்ந்தவர் பிரேமா (எ) ஜெயலட்சுமி. இவர் தன்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என தொடர்ந்து கூறி வருகிறார். இவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் நிறுவனராகவும் உள்ளார். இவர் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மதுரைக்கு வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: தேனி தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்ய வந்தேன். திருச்சி, திருநெல்வேலி, சேலம், கோவை, தேனி ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம். எனது அம்மா ஜெயலலிதாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த தேர்தலில் போட்டியிட உள்ளேன். தற்போது வரைக்கும் எங்களது கட்சியை மாநில கட்சியாக பதிவு செய்துள்ளோம். இவ்வாறு பேசினார்.