தேனி மாவட்டத்தில் அனைத்து கண்மாய்களையும் தூர்வார வேண்டும்-விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

ஆண்டிபட்டி : தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வாரி பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் இயற்கை பூமியின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இங்குள்ள போடி, கம்பம், வருசநாடு, பெரியகுளம் போன்ற பகுதிகள் மலையும், மழையும் சார்ந்த இடம் என்று கூட கூறலாம். அந்தளவுக்கு சிலிர்க்க வைக்கும் சிகரங்கள், தேடி வந்து கொட்டும் மழைச்சாரல் என இயற்கை வளம் இங்கு கொட்டிக் கிடக்கிறது.

தேனி மாவட்டத்தில் 30 சதவீத மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளதால், விவசாயமே மாவட்ட பொருளாதாரத்தின் மிக முக்கியமான பிரிவாக விளங்குகிறது. மாவட்டத்தில் ஏராளமான கண்மாய் மற்றும் குளங்கள் உள்ளன. மழை காலங்களில் பெய்யும் தண்ணீரை இந்த கண்மாய் குளங்களில் தேக்கி சேமித்து வைத்து அதனை விவசாயத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள கண்மாய் குளங்களில் மற்றும் தண்ணீர் செல்லும் வரத்து கால்வாய்கள் ஆகிய இடங்களில் அதிகளவில் சீமை கருவேல மரங்கள் முளைத்து பெரிய மரமாக வளர்ந்து நிற்கிறது. கண்மாய் குளங்களில் கரைப்பகுதி மற்றும் உள்பகுதி ஆகிய இடங்களிலும் புதர் மண்டிக் கிடக்கிறது.இதனால் கண்மாய் குளங்களை இயந்திரங்கள் மூலம் தூர்வாருவதில் சிக்கல் ஏற்படுகிறது. போதிய அளவு தண்ணீரை தேக்கி வைக்க முடியாமல் போகும் நிலை இருந்து வருகிறது.

ஆண்டிபட்டி ஒன்றியத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களும் 100க்கும் மேற்பட்ட உட்கிரமங்களும் உள்ளன. இங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இந்த பகுதிகளில் கத்தரி, வெண்டை, தக்காளி, முருங்கை, வாழை மற்றும் பூ வகைகளில் மல்லிகை, முல்லை, பிச்சி உள்ளிட்ட பல்வேறு ரகங்களும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதனை தவிர மானாவாரி பயிர் சாகுபடி முக்கிய பங்களிக்கிறது. இந்தப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது.

இதில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் கண்மாய் மூலம் பாசன வசதி பெற்று வந்தது. இந்த பகுதியில் ஆசாரிப்பட்டி கண்மாய், கன்னியப்பபிள்ளைபட்டி, வரதராஜபுரம் கண்மாய், அதிகாரி கண்மாய், செங்குளம், கருங்குளம் கண்மாய், மும்மூர்த்தி கண்மாய், தெப்பம்பட்டி கண்மாய், கோவில்பட்டி கண்மாய், ஜம்புலிபுத்தூர் கண்மாய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. கண்மாய் பாசனத்தை உறுதி செய்யும் வகையில் மன்னராட்சி காலத்தில் வேலப்பர் கோயில் மலைப்பகுதியில் இருந்து ஓடைகள் வெட்டப்பட்டு நாகலார் ஓடை வழியாக கண்மாயில் நீர் தேக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

இதேபோல ஏத்தக்கோவில் மலைப்பகுதியில் இருந்து ஓடை அமைக்கப்பட்டு அந்த வழியில் கண்மாயில் நீர் தேக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருந்தது.ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஆண்டிப்பட்டி ஒன்றிய பகுதிகளில் போதிய அளவு மழை பெய்யாததால் கண்மாய்களில் நீர்வரத்து ஏற்படவில்லை. கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது. ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் மழை பெய்யாததாலும், கண்மாய்களில் நீர்வரத்து இல்லாததாலும் மானாவாரி விவசாயம் நசிந்த நிலையில் காணப்படுகிறது.

பெரியாறு, வைகை ஆறு உள்ளிட்டவை சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு பயன் இல்லாமல் இருக்கிறது. தலைமடையில் இருக்கும் வைகை அணை ஐந்து மாவட்ட விவசாயத்திற்கு முக்கிய பங்களித்து வருகிறது. ஆனால் ஆண்டிபட்டியில் வைகை அணை இருந்தும் பயனில்லாமல் உள்ளது. திப்புரவு அணை திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைத்து ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டம், உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பிலேயே உள்ளது.ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 30க்கும் மேற்பட்ட கண்மாய்களும், குளங்களும் உள்ளன. 100க்கும் மேற்பட்ட கிணறுகளும் உள்ளன.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இதில் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும், கிராமப் பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. ஆனால் கண்மாய் மற்றும் ஓடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாலும், தூர்வாரப்படாததாலும் நீர்வரத்து ஏற்படவில்லை. ஒன்றிய பகுதிகளில் உள்ள கண்மாய்களிலும் ஒடைகளிலும் நீர்வரத்து ஏற்படவில்லை. நிலத்தடி நீர்மட்டமும் உயரவில்லை.

இதனால் இறவை பாசனமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட கண்மாய், குளங்களில் தண்ணீர் பெருக வேண்டும். இதற்கு நீர்வரத்து கால்வாய்கள் மற்றும் கண்மாய், குளங்களை உடனடியாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே விவசாயிகள் உள்பட அனைத்து தரப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்பவர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டாலும் அதனை பயன்படுத்த முடியாத நிலையில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

எனவே, அனைத்து கண்மாய்களையும் நீர்வரத்து ஓடைகளையும் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி சீரமைப்பு செய்தால் நீர்வரத்து ஏற்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே தேனி மாவட்ட பகுதிகளை வளமாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு