தேனாம்பேட்டை மண்டலத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உதயநிதி அறிவுரை

சென்னை: தேனாம்பேட்டை மண்டலத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது, பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 114வது வார்டுக்குட்பட்ட பங்காரு தெருவில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.2.47 கோடி மதிப்பில் 9,100 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் மூன்று தளத்துடன் கூடிய சென்னை நடுநிலை பள்ளிக் கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதை முன்னிட்டு, அந்த இடத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதை தொடர்ந்து, வார்டு-115க்குட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் மாநில மேலாண்மை பேரிடர் நிதியின் கீழ் ரூ.1.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், வார்டு-116க்குட்பட்ட டாக்டர் பெசன்ட் சாலையில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.1.05 கோடி மதிப்பில் 4,656 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த திறன் மற்றும் விளையாட்டு மையத்தின் கட்டிடப் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதையடுத்து, வார்டு-120க்குட்பட்ட லாய்ட்ஸ் காலனியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.7.13 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் நாய் இனக்கட்டுப்பாட்டு மையக் கட்டிடப் பணியினைப் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள் ஷரண்யா அறி, ஷேக் அப்துல் ரஹ்மான், நிலைக்குழுத் தலைவர்கள் சிற்றரசு, சாந்தகுமாரி, மண்டலக் குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், கவுன்சிலர் ஏ.ஆர்.பி.எம். காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

தேர்தல் பத்திர வழக்கு: மறு ஆய்வு மனு தள்ளுபடி

மகாராஷ்டிரா மாநிலத்தில் ரூ.23,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் கடன் தீர்ப்பாயத்தின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை :உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து