சென்னை மாவட்டம், தேனாம்பேட்டை, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமாக தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலையில் அமைந்துள்ள 1738 சதுர அடி மனையில் வணிக வளாகம் கட்டப்பட்டு அதில் 9 கடைகள் வாடகைக்கு விடப்பட்டிருந்தன. வாடகைதாரர்கள் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்தனர். இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப் பிரிவு 78-ன் கீழ், சென்னை மண்டலம்-2 இணை ஆணையர் அவர்களின் நீதிமன்ற உத்தரவின்படி, உதவி ஆணையர் திரு. பாரதிராஜா அவர்களின் தலைமையில் காவல்துறையினரின் உதவியுடன் பூட்டி சீல் வைக்கப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 1.67 கோடி ஆகும். இந்நிகழ்வின்போது தனி வட்டாட்சியர் (ஆலய நிலங்கள்) திருவேங்கடம், திருக்கோயில் செயல் அலுவலர் ரமேஷ், சரக ஆய்வாளர் மணி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.