தாம்பரம்: மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து கிறிஸ்தவர்கள் தாம்பரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர். மணிப்பூரில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் கலவரத்தை ஒன்றிய மற்றும் மணிப்பூர் மாநில பாஜ அரசுகள் கட்டுபடுத்த தவறியதை கண்டித்தும், கிறிஸ்தவர்கள், தேவாலயங்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் தாம்பரம் அனைத்து கிறிஸ்தவர்கள் இயக்கம் சார்பில், தாம்பரம் சிஎஸ்ஐ தேவாலயத்தின் செயலாளரும், பொறியாளருமான ப.சாமுவேல் எபினேசர் தலைமையில், தாம்பரம் சண்முகம் சாலையில் கண்டன ஆர்பாட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செயலாளர் வன்னி அரசு, தாம்பரம் மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ், எஸ்.இந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான யாக்கூப், தாம்பரம் சிஎஸ்ஐ தேவாலயத்தின் பொருளாளர் ஜெயக்குமார், ஜேம்ஸ்கோபு, போதகர்கள், கிறிஸ்தவர்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ அரசு ஆட்சி பொறுபேற்ற நாள்முதல் இதுபோல் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடைபெறுகிறது. இதனை பிரதமர் மோடி கட்டுப்படுத்தாமல் இருப்பது ஏன். கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலுக்கு நியாயம் கிடைத்திட வேண்டும். தமிழகத்தில் எழுப்பபடும் கண்டன குரலை பார்த்தாவது, பிரதமர் இன கலவரத்தை நிறுத்திட முன்வர வேண்டும்’’ என்றார்.