திருட முயன்ற வாலிபரை கம்பத்தில் கட்டி அடி, உதை: பசி என்று அலறியதால் சாப்பாடு கொடுத்தனர்

திருமலை: வீடுகளில் திருட முயன்ற நபரை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர். அப்போது அவர் பசி, பசி என அலறியதால் உணவு கொடுத்தனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம், எல்லாரெட்டிகூடம் கிராமத்தில் உள்ள கோயில், வீடுகளை நேற்று ஒரு வாலிபர் நோட்டமிட்டபடி அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தார். இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள், சிலர் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் சரியாக பதிலளிக்கவில்லை. எனவே அந்த வாலிபர், வீடு, கடைகளில் திருட முயன்றவர் என முடிவு செய்த அவர்கள், அந்த நபரை அங்குள்ள மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரி அடித்து, உதைத்தனர். அப்போது அந்த நபர் கதறி அழுதபடி பசி, பசி என்றார்.

இதனால் தாக்குதலை நிறுத்திய இளைஞர்கள், தங்கள் வீட்டில் இருந்த உணவை கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் அவரை விடுவிக்காமல் அவர்களே ஊட்டிவிட்டனர். பின்னர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த நபரை மீட்டு விசாரித்தனர். அதில் அவர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கணேஷ் (21) என்பதும், வீடுகளில் திருட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கணேஷை கைது செய்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சியா? : நியூயார்க் போலீசார் விளக்கம்

ஓரத்தநாடு அருகே வட்டி வசூல் செய்ய சென்றபோது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு..!!

போலி ஐஏஎஸ் அதிகாரிக்கு உடந்தை: பாஜக நிர்வாகி கைது