திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பொன்னானி மாரஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அலிகான் (62). கடந்த சில தினங்களுக்கு முன்பு ரயிலில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இரவில் கீழ் பெர்த்தில் படுத்து தூங்கினார். அவரது பெர்த்துக்கு மேலுள்ள நடு பெர்த்தில் வேறு ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தார். ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகே ரயில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நடு பெர்த் அறுந்து அலிகானின் மேல் விழுந்தது. இதில் அவரது கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் விரைந்து சென்று அலிகானை மீட்டு வாரங்கலில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஐதராபாத்திலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அலிகான் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது உடல் பொன்னானிக்கு கொண்டு செல்லப்பட்டது.