Friday, June 28, 2024
Home » பாரபட்சம்

பாரபட்சம்

by Neethimaan

நா டாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. நாடாளுமன்றத்தில் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் பதவி பிரமாணம் செய்துவைக்கப்பட்டது. இதை தொடர்ந்து மக்களவை சபாநாயகராக ஓம்பிர்லாவை மோடி முன்மொழிந்தார். ஆனால் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு விட்டுக்கொடுப்பது தான் மரபு. அதன்படி துணை சபாநாயகர் பதவியை காங்கிரசுக்கு அளிக்க வேண்டும் என்று பாஜவிடம் வலியுறுத்தப்பட்டது. ஆனால் காங்கிரசின் கோரிக்கையை பாஜ நிராகரித்தது. கடந்த முறை காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இல்லாத நிலையில் துணை சபாநாயகர் இல்லாமலேயே மக்களவை இயங்கியது. இம்முறை 98 உறுப்பினர்களை கொண்டு காங்கிரஸ் பலமாக இருக்கிறது. எனவே துணை சபாநாயகர் பதவியை வழங்க வலியுறுத்தப்பட்டது.

பாஜ முறையான பதில் வழங்காத நிலையில் சபாநாயகர் தேர்தலை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. காங்கிரஸ் சார்பில் மாவேலிகரா தொகுதி எம்பி சுரேஷ் சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பெரும்பான்மை உறுப்பினர்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு உள்ளதால் அவர்கள் தரப்பு வேட்பாளர் தான் வெற்றி ெபறுவார் என்று அறிந்திருந்தும் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. காரணம் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிக்கு விட்டுத் தராத ஆளும் கட்சியின் மனப்பான்மைக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கதான். குரல் வாக்கெடுப்பில் ஓம்பிர்லா வெற்றி பெற்றதும், டிவிஷன் ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோரவில்லை. அதை காங்கிரஸ் விரும்பவும் இல்லை. ஏனென்றால் ஆட்சியாளர்களுடன் ஒருங்கிணைந்து எதிர்க்கட்சி செயல்பட வேண்டும் என்று தார்மீக கடமையை காங்கிரஸ் மதிக்கிறது.

எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்தியும், பிரதமர் மோடியும் சபை விதிகளின் படி சபாநாயகரை வரவேற்று அவரது இருக்கையில் அமரவைத்தனர். ஆளும்கட்சி, எதிர்க்கட்சிக்கு நடுவில் இருக்கையில் அமர்ந்து சபையை பாரபட்சமின்றி நடுநிலையோடு நடத்த வேண்டிய பொறுப்பும், கடமையும் சபாநாயகருக்கு இருக்கிறது. கடந்த முறை போன்று ஆளும் பாஜ உறுப்பினர்களுக்கு ஆதரவாக செயல்படாமல் தனது பதவியின் கண்ணியத்தை உணர்ந்து அவையை நடத்தி செல்ல வேண்டும் என்பதே எதிர்க்கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இரண்டாவது முறையாக ஓம்பிர்லா சபாநாயகராக பதவியேற்றுள்ளார். இருந்தும் துணை சபாநாயகர் பதவி குறித்து மோடி தலைமையிலான மோடி அரசு இன்னும் மவுனம் சாதிக்கிறது. துணை சபாநாயகர் பதவி என்பது எதிர்க்கட்சியான காங்கிரசின் உரிமை. எனவே அவர்கள் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்புகிறார்கள்.

அதே போல் மக்களின் உரிமைக்காகவும், குரல் கொடுப்பார்கள். எனவே, சபாநாயகர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துகளையும் அவையில் பதிவு செய்ய போதிய அவகாசம் வழங்க வேண்டும். அதை சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் காங்கிரஸ் எதிர்பார்க்கிறது. ஆனால் சபாநாயகர் பதவியேற்ற முதல் உரையிலேயே அவசரநிலை குறித்து பேசி எதிர்க்கட்சிகளை தூண்டினார். சபாநாயகர் தான் சார்ந்த கட்சியை மறந்து, தனது பதவியின் பொறுப்பை உணர்ந்து பாரபட்சமின்றி முந்தைய சபாநாயகர்களின் நடுநிலை வழியை பின்பற்ற வேண்டும். அடுத்தடுத்து சபாநாயகர் பதவிக்கு வருபவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும். அதன்படி புதிய சபாநாயகரும் நடந்து கொண்டு நம்பிக்கையை காப்பாற்றுவார் என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

You may also like

Leave a Comment

five × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi