பெரம்பூர்: புளியந்தோப்பு அம்பேத்கர் நகர் 2வது தெருவை சேர்ந்தவர் அன்சர் பாஷா (49). இவர் சாம்பிராணி புகை போடும் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஆடுதொட்டி உள்ளிட்ட இடங்களில் சாம்பிராணி புகை போட்டுவிட்டு வீட்டிற்கு வந்தபோது, அன்சர் பாஷாவின் வீட்டிலிருந்து ஒரு நபர் தப்பி ஓடியுள்ளார். அப்போது வீட்டின் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக அன்சர் பாஷா உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் திருடுபோனது தெரிந்தது.
தப்பி ஓடிய நபர் அன்சர் பாஷாவுக்கு நன்கு அறிமுகமான புளியந்தோப்பு ஜேஜே நகரைச் சேர்ந்த ஜீவா (20) என்பதால், அவரது வீட்டிற்குச் சென்று பணத்தையும், செல்போனையும் அன்சர் பாஷா கேட்டுள்ளார். ஆனால் ஜீவா தான் திருட்டில் ஈடுபடவில்லை என்று கூறியுள்ளார். இதனால் அன்சர் பாஷா புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த புளியந்தோப்பு போலீசார் ஜீவாவை கைது செய்து அவரிடமிருந்து பணம் மற்றும் செல்போனை மீட்டனர்.