விருத்தாசலம்: பெண்ணாடம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஸ்லீப்பர் கட்டைகளை இணைக்கும் ஊக்குகள் கழன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலை கவிழ்க்க நடந்த சதியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த பெண்ணாடம் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து திருச்சி மார்க்கமாக உள்ள ரயில் தண்டவாளத்தில், தண்டவாளத்தையும் ஸ்லீப்பர் கட்டைகளையும் இணைக்கும் ஊக்குகள் 12க்கும் மேற்பட்டவை கழண்டு கிடப்பதாகவும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு தகவல் கிடைத்தது. உடனே பெண்ணாடம் போலீசார் மற்றும் விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
பெண்ணாடம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை சோதனை செய்தனர். இதில் ரயில் தண்டவாளத்தின் பொருத்தப்பட்டிருந்த 4 ஊக்குகள் கழண்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே தகவலின் பேரில் விருத்தாசலம் ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து, ஊக்குகளை சீரமைத்தனர். இதனால் சென்னையில் இருந்து காரைக்குடி வரை செல்லும் பல்லவன் அதிவிரைவு ரயில், தாழநல்லூர் ரயில் நிலையத்தில் சுமார் 5 நிமிடம் நின்றது. தண்டவாளம் சீரமைக்கப்பட்டதை உறுதி செய்த பின்பு புறப்பட்டது. இதனால் அடுத்தடுத்து வந்த அனைத்து ரயில்களும் அந்தந்த ரயில்வே நிலையங்களில் சுமார் 5 நிமிடம் தாமதமாக நின்று சென்றதாக ரயில்வே ஊழியர்கள் தெரிவித்தனர்.
ரயிலை கவிழ்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சதியா? என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை காவல்துறைக்கும், ரயில்வே துறைக்கும் தெரிவித்த அந்த மர்ம நபர் யார்? என்பது குறித்து ரயில்வே போலீசார் மற்றும் பெண்ணாடம் காவல் நிலைய போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.