காஞ்சிபுரம்: தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் பாரதியாரின் 142வது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு, கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் பரிசுகளை வழங்கினார். மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி சார்பில், பாரதியாரின் 142வது பிறந்தநாள் விழா கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மனு வேல்ராஜ் தலைமை தாங்கினார். இதில், கல்லூரி நிர்வாக இயக்குநர் மணி பங்கேற்று பாரதியார் பாடல்கள், கவிதைகள் மற்றும் சுதந்திர தாக்கத்தை ஏற்படுத்திய பாரதியாரின் கட்டுரை பற்றியும் விரிவாக, கல்லூரி மாணவ-மாணவிகளிடையே பேசினார். மேலும், பாரதியாரின் சுதந்திர போராட்டங்கள், வாழ்க்கை வரலாறுகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள், இளைய சமுதாயத்தினர் தெரிந்துகொள்ள வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து, கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கல்லூரி முதல்வர் மனுவேல்ராஜ் பரிசுகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், உதவி பேராசிரியர்கள், 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.