Sunday, September 15, 2024
Home » தலைவி பத்தி பேசுனதுக்கு பொங்கி எழாம பம்முற மாஜிக்கள பத்தி சொல்கிறார்: wiki யானந்தா

தலைவி பத்தி பேசுனதுக்கு பொங்கி எழாம பம்முற மாஜிக்கள பத்தி சொல்கிறார்: wiki யானந்தா

by Karthik Yash

‘‘நெற்களஞ்சியத்தில் மாவட்ட செயலாளர் மீதான அதிருப்தியில் உச்சகட்டத்தை எட்டியுள்ள பனிப்போர்” பற்றி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘இலை கட்சியில் சேலம்காரர் கை ஓங்கியதும் தேனிக்காரர் மற்றும் முக்கிய பொறுப்பில் இருந்த அவரது ஆதரவாளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். டெல்டா மாவட்டத்தில் தேனிக்காரர் ஆதரவாளர்கள் வகித்து வந்த காலியான பதவி இடங்களுக்கு சேலம்காரர் ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் நெற்களஞ்சியத்தில் முதல் எழுத்தில் ஆரம்பிக்க கூடிய ‘மா’ பெயர் கொண்டவருக்கு மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. இது கட்சியில் உள்ள முதல்கட்ட, 2வது கட்ட சில நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லையாம்… இதனால சேலம்காரர் மீது கடும் அதிருப்தியில் மாவட்ட செயலாளர் மீது அவ்வப்போது காட்டத்தை வெளிப்படையாகவே அவர்கள் காட்டி வருகிறார்கள். இதனால் உச்ச கட்டத்துக்கு சென்ற மத்திய மாவட்ட செயலாளர், இலை கட்சியில் தன் மீது அதிருப்தியில் இல்லாத நிர்வாகிகளை மட்டும் அவ்வப்போது தனியாக அழைத்து ரகசியமாக ஆலோசனை நடத்துறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் தன்னுடையை கை ஓங்க வேண்டும் என மாவட்ட செயலாளர் நினைக்கிறாராம்… அதற்காக பல்வேறு கட்ட முயற்சிகளை திரைமறைவான வேலையில் அவர் மேற்கொண்டு வருகிறார். இதனால் நெற்களஞ்சியம் மாவட்டத்தில் இலை கட்சியில் பனிப்போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தலைவி பத்தி தேனிக்காரரு பேசியதுக்கு பொங்கி எழாம, மாஜிக்கள் பம்முறாங்களாமே…?” ஏன் என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அம்மா ரூ.2 கோடி பணம் கடன் கேட்டார் என தேனிக்காரர் பேசிய பேச்சை, அவருக்கு நெருக்கமானவர்கள் மற்றும் அவரது அணி நிர்வாகிகளே விரும்பவில்லையாம். இதுதொடர்பாக அவரிடமே சிலர், வெளிப்படையாக கூறியுள்ளனர். தன் தரப்பில் அவர் சில விளக்கங்களை கூறினாலும், அவர்கள் ஏற்கவில்லை என்ற தகவல்கள் கிடைத்துள்ளன. சேலத்துக்காரரை தாக்கி பேசினது சரி… முன்னாள் தலைமையை விமர்சிக்க வேண்டாமே என கூறியுள்ளனர். இதையறிந்த சேலத்துக்காரர், தென்மாவட்ட இலைக்கட்சி மாஜி அமைச்சர்கள், எம்எல்ஏக்களை தூண்டி விட்டு, தேனிக்காரரை மிக கடுமையாக பேசுமாறு கூறியுள்ளாராம். தலைமை உத்தரவிட்டும், தூங்கா நகரத்தில் மட்டுமே எதிர்ப்புக்குரல் பலமாக எழும்பியது. மற்ற தென்மாவட்டங்கள் தூங்கி வழிகிறதாம். இதனால் சேலத்துக்காரர் தரப்பு ஷாக் ஆகியுள்ளது. இதுகுறித்து விசாரித்தபோது, ‘தனக்கு பிரச்னைன்னா கட்சி தலைவியையே மாட்டி விடுகிறாரே? நாம எல்லாம் எந்த மூலைக்கு? நம்மளை பத்தி அக்குவேறு, ஆணிவேறா அறிந்தவராயிற்றே.. ஏதாவது சொல்லி வம்புல மாட்டி விட்டுருவாரோ? எதற்கு பிரச்னை… பேசாமல் கம்முனு இருந்துடுவோம்..’ என எண்ணி அமைதி காப்பது தெரிய வந்ததாம்… பொறுத்தது போதும்… பொங்கி எழுங்கள் என சேலத்துக்காரர் மீண்டும் உத்தரவு போட்டுள்ளாராம்… இதனால் என்ன செய்வது என தெரியாமல் தென்மாவட்ட மாஜிக்கள் கையை பிசைகின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பசை உள்ள பைலா கொண்டு வாப்பா…! என்கிற பெண் அதிகாரி பற்றி சொல்லுங்களேன்” என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு நடிகையின் பெயர் கொண்ட ஒரு பெண் அதிகாரி உதவி ஆணையராக பதவி ஏற்றார். இவர், பதவி ஏற்ற நாள் முதல் இன்றுவரை எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடுவதில்லையாம். நகரமைப்பு பிரிவில் 60 கோப்புகள் முடங்கி கிடக்க, இதில் 3-ல் மட்டுமே கையெழுத்து போட்டுள்ளாராம். அந்த மூன்று பைல்களும் ‘பசை’ உள்ள பைல்கள் என்கிறார்கள். வருவாய் பிரிவில் சொத்து வரி, குடிநீர் வரி, காலியிட வரி, தொழில் வரி போன்ற விண்ணப்பங்களை பரிசீலனை செய்து, அந்த ஆவணங்களிலும் கையெழுத்து போடாமல், விண்ணப்பதாரர்களை அலைக்கழிக்கிறாராம். இதனால், பலர், வரி புத்தகம் கிடைக்காமல் நடையாய் நடக்கிறார்கள். ‘எம்.எல்’ புக் என்று அழைக்கப்படும் மாதாந்திர பட்டியலில்கூட இந்த பெண் அதிகாரி கையெழுத்து போடுவதில்லையாம். இதனால், நொந்துபோன வரி வசூலர்கள், யாரிடம் போய் முறையிடுவது என தெரியாமல் தவிக்கின்றனர். இவர், தனக்கு தானே புதிய சட்ட விதிமுறைகளை தயார் செய்துகொண்டு, அதன்படி நடக்கிறாராம். ‘பசை’ உள்ள பைல்களை மட்டும் கொண்டு வாங்கப்பா… என்கிறாராம்…! இது, எங்கே போய் முடியப்போகிறதோ…? என இங்குள்ள ஊழியர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் புலம்பி தள்ளுகின்றனர்….!” என சொல்லி புன்னகை பூத்தார் விக்கியானந்தா.
‘‘200க்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை தலைவரே அடமானமா வாங்கி வச்சிருக்கறதா சொல்றாங்களே” ஆச்சரியமா கேட்டார் பீட்டர் மாமா.
‘‘பொது வினியோக திட்டத்தில இலவசமா வழங்கப்படுற அரிசியை வாங்கி, வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்வதை தடுக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் பறக்கும் படை தாசில்தார்களும் நடவடிக்கை எடுத்து வர்றாங்க. இந்நிலையில, வெயிலூர் மாவட்டத்தில பேரணாபட் அருகே குப்பம் கிராமத்தில இருக்கிற மாஜி ஊராட்சி மன்ற தலைவரான ஜெயமானவரு 4 கிராமங்களை சேர்ந்த பொதுமக்களிடம் ரூ.5 ஆயிரம் கொடுத்து ரேஷன் கார்டுகளை வாங்கி சேகரித்துக் கொண்டாராம். இந்த ரேஷன் கார்டுகள வச்சு ரேஷன் கடைகளில இருந்து அரிசி, பாமாயில், சர்க்கரை உள்ளிட்டவற்றை வாங்கி, வெளி மாநிலங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்தாராம்.
இந்த நூதன மோசடிய யாரோ மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசியமா தட்டி விட்டாங்களாம். உடனே மாவட்ட வழங்கல் அதிகாரி, உணவு கடத்தல் பிரிவு போலீசார் இணைந்து ஜெயமானவரின் வீட்டில் நடத்திய சோதனையில் ரேஷன் கார்டு ஏதுவும் சிக்கவில்லையாம். ஆனா அருகே உள்ள ரேஷன் கடையில, நடத்திய விசாரணையில ஜெயமானவரிடம் உள்ள ரேஷன் கார்டுகள் விவரங்களை சேகரித்தாங்களாம். இதுல அப்பகுதியை சேர்ந்த மக்கள் ரூ.5 ஆயிரத்திற்கு மாஜி தலைவர் ஜெயமானவரிடம் 200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள அடமானம் வச்சிருக்கிற தகவல் தெரிஞ்சதும் அதிகாரிங்க அதிர்ச்சியாகிட்டாங்களாம். அந்த ரேஷன்கார்டுகள பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள்ல தீவிரமா இறங்கியிருக்காங்களாம். இந்த டாப்பிக் தான் மாவட்டம் முழுக்க பரபரப்பா பேசிக்கிறாங்க” என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

six − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi