மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ஆண்டு தோறும் மாசி மாத பவுர்ணமி அன்று தலசயன பெருமாள் கோயில் குளத்தில் தெப்ப உற்சவமும், மறுநாள் கடற்கரையில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். தலசயன பெருமாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த 3 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நடத்தப்படவில்லை. இந்நிலையில், கடந்த 1ம் தேதி தலசயன பெருமாள் கோயிலில் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இந்நிலையில், வரும் 23ம் இரவு பவுர்ணமியை முன்னிட்டு 3 ஆண்டுகளுக்கு பிறகு தெப்ப உற்சவமும், மறு நாள் காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
இதற்காக, எந்த மாதிரியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது குறித்து மாமல்லபுரம் வியாபாரிகள் தெப்ப உற்சவ கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தெப்ப உற்சவம் சிறப்பான முறையில் நடத்த வேண்டும். பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு தெரியபடுத்தும் வகையில் போஸ்டர்கள் ஒட்ட வேண்டும் என முடிவு செய்யப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும், தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கு கோயில் நிர்வாகம் உள்ளூர் மக்களை முறையாக அழைக்காமல் அலட்சியபடுத்தியது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.