பாங்காக்: தாய்லாந்து நாட்டில் தன்பாலின திருமணத்துக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் ஜனவரி மாதம் முதல் குறிப்பிட்ட சட்டம் அமலுக்கு வருகிறது. கடந்த ஜூன் மாதம் ஒரே பாலின திருமணத்துக்கு தாய்லாந்தின் செனட் சபை ஒப்புதல் அளித்தது. இதனைத்தொடர்ந்து அந்த மசோதா மன்னர் மகா வஜிரலங்கோனின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அவரும் ஒப்புதல் அளித்துவிட்டார். தற்போது சட்டரீதியாக தன்பாலின திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஜனவரி மாதத்திலிருந்து சட்டம் அமலுக்கு வரும் என்பது உறுதியாகியுள்ளது.
சட்டம் அமலுக்கு வரும் தினத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன் பாலின ஜோடிகள் திருமணம் செய்வதற்கு தயாராகி வருவதாக தாய்லாந்தின் மாற்று பாலினத்தவர்களின் அமைப்பு தெரிவித்துள்ளது. சில நாடுகளில் தன் பாலின திருமணங்கள் செய்துகொண்டாலோ அல்லது தொடர்பில் இருந்தாலோ கொடூரமான தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட நாடுகளுக்கு மத்தியில் மக்களின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து தன் பாலின திருமணத்திற்கு தாய்லாந்து ஒப்புதல் அளித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.