ஈரோடு: ஈரோட்டில் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பண்டிகை காலங்களில் மதுவிற்பனை என்பது மற்ற பொருட்களை அதிக அளவில் வாங்குவது போலத்தான். அவர்களது சந்தோஷத்துக்காக வாங்குகிறார்கள். விற்பனைக்காக நாங்கள் திட்டமிட்டு எதையும் செய்யவில்லை. அதை தடுப்பதும் கடினம். அதே நேரம் மது விற்பனையை குறைக்கவும், தவிர்க்கவும் வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். ஏற்கனவே கூறியதுபோல மது அருந்துபவர்களுக்கு அதை தவிர்த்திட கவுன்சிலிங் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுத்தான் வருகின்றன. டெட்ரா பேக்கில் மது விற்பனை குறித்த ஆய்வறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். முதலமைச்சரின் கருத்தின்படி மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கவே பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி கூறினார்.