இஸ்லாமாபாத்: உள்ளூர் தீவிரவாதிகள் மூளைசலவை செய்ததாக தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கைது செய்யப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். உலக சுகாதார நிறுவனத்தில் சார்பில் பாகிஸ்தானில் செவிலியராக பணியாற்றி வரும் அடிலா என்பவர் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினருக்கு எதிராக மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டார். அவரை பலுசிஸ்தானில் உள்ள துர்பத்தில் போலீசார் கைது செய்தனர். குவெட்டாவில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய அடிலா, ‘‘பொய்யான வாக்குறுதிகளின் கீழ் தீவிரவாத குழுக்களில் சேர்வதற்கு ஈர்க்கப்பட்டேன்.
புதிய மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையின் தவறான நம்பிக்கையை அவர்கள் எனக்கு காட்டினார்கள். மலைகளில் இருக்கும் தீவிரவாதிகளுடன் சேர்ந்த பின்னர் தான் வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்தது என்பதை உணர்ந்தேன். தீவிரவாதிகள் என்னை மனித குண்டாக மாற்றினார்கள். தீவிரவாதிகள் பலூச் பெண்களை மிரட்டி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறார்கள். பலூச் இளைஞர்கள், பெண்கள் இருவருமே இதுபோன்று மூளைசலவை செய்யப்படுகின்றனர். தீவிரவாதிகளால் நான் மட்டும் தவறாக வழிநடத்தப்படவில்லை. மக்களுக்கு உதவுவது, உயிரைக்காப்பது தான் எனது வேலை. ஆனால் சரியான பாதையில் இருந்து என்னை திசைதிருப்பியவர்களால் நான் தவறாக வழிநடத்தப்பட்டேன்” என்றார்.