புதுடெல்லி: தீவிரவாதத்திற்கு நிதி உதவி செய்த வழக்கில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், காஷ்மீரின் பாராமுல்லாவை சேர்ந்த ஷேக் அப்துல் ரஷீத் என்கிற இன்ஜினியர் ரஷீத் என்ஐஏவால் கடந்த 2019ல் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பாராமுல்லா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட ரஷீத், தேசியமாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லாவை வென்றார். இதைத் தொடர்ந்து, எம்பியாக பதவியேற்க இடைக்கால ஜாமீன் கோரி கடந்த மாதம் 22ம் தேதி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரஷீத் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நேற்று பதிலளித்த என்ஐஏ தரப்பு வக்கீல், வரும் 5ம் தேதி ரஷீத் பதவியேற்க ஒப்புதல் அளிப்பதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளது.