சென்னானி: தீவிரவாதம் புதைக்கப்பட்டு விட்டது என்றும் மீண்டும் அரங்கேற்ற அனுமதிக்க முடியாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ஜம்மு காஷ்மீர் சட்ட பேரவை தேர்தலையொட்டி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். உதம்பூர் மாவட்டம், சென்னானி பகுதியில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அமித் ஷா,‘‘அரசியல் சட்டத்தின் 370வது பிரிவு இல்லாமல் ஜம்மு காஷ்மீரில் இப்போது தேர்தல் நடக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு அரசியல் சட்டம் 370 ஐ நீக்கியதன் மூலம் கட்சியின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றியுள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை யார் பரப்பினாலும் அவர்களுக்கு தூக்கு மேடை தான் பதிலாக கிடைக்கும். போலீசார் மற்றும் ராணுவத்தினர் மீது கல்லெறிந்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா இதுபோன்ற விஷயங்களை சிந்திப்பது இல்லை. ஏனென்றால் அவரால் செய்ய முடியாது. இது நீதிமன்றங்களின் பணியாகும். இனிமேல் கல்லெறி சம்பவங்கள் நடக்காத அளவில் கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது’’ என்றார்.