கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே தேர்வழி கிராமத்தில் பழைய இரும்பு குடோனில் பயங்கர தீ விபத்து நடந்துள்ளது. கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சியில் பழைய பிரிட்ஜ் வாஷிங் மெஷின் ஆகியவற்றின் இரும்பு பொருட்களை தரம் பிரிக்கும் பழைய குடோன் உள்ளது. இந்த குடோன் எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி (45) என்பவருக்கு சொந்தமானது. இந்நிலையில், நேற்று காலை குடோனில் திடீரென தீ பற்றியது. அந்த தீ பரவி மளமளவென கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால், சுற்றுவட்டார பகுதிக புகை மண்டலமாக காட்சியளித்தது.
தகவலறிந்த கும்மிடிப்பூண்டி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தீ கட்டுக்கடங்காததால் சிப்காட்டிலிருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. பின்னர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் இதில் சுமார் ரூ..5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.தீ விபத்துக்கு மின்கசிவே காரணம் என தெரியவந்தது.