சென்னை: ஒமேப்ர ஸோல் மற்றும் ஃபோம்பிசோல் இரண்டு மருந்துகளும் கையிருப்பில் உள்ளன. எடப்பாடி பழனிசாமி மக்களிடையே பதற்றத்தை உருவாக்கி வருகிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் மற்றும் அதனை சுற்றிய பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் இருந்து தலைமைச் செயலகம் வழியாக பிராட்வே பேருந்து நிலையம் வரை தடம் எண் 18 ஏ என்ற புதிய சொகுசு பேருந்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
கலைஞர் பவளவிழா சமூகநலக் கூடம் அருகில் நடந்த இந் நிகழ்ச்சியின்போது அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவர் தேவையில்லாமல் மருத்துவமனைக்கு சென்று, ஒமேப்ரஸோல் (Omeprazole) என்ற மருந்தின் பெயரைச் சொல்லி மருந்து கையிருப்பு இல்லை என்று சொல்கிறார். ஆனால் அந்த மருந்து 4 கோடியே 42 லட்சம் மருந்துகள் உள்ளன.மருந்து இல்லாததால்தான் இழப்பு ஏற்பட்டது என்ற பொய்யான தகவலை, பதற்றத்தை ஏற்படுத்தும் செய்தியை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். எடப்பாடி கேட்ட அனைத்து மருந்தும் கையிருப்பில் உள்ளது என்பதை காட்டுகிறோம். இதைப் பார்த்ததற்குப் பிறகு, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்வதுதான் எடப்பாடி பழனிசாமிக்கு தார்மீக கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.