தென்காசி மேலசங்கரன்கோயில், அம்பை சின்ன சங்கரன்கோயிலில் ஆடித்தபசு திருவிழா கோலாகலம்

*திரளான பக்தர்கள் பங்கேற்பு

தென்காசி : தென்காசி காசி விசுவநாத சுவாமி கோயிலைச்சார்ந்த மேலச்சங்கரன்கோயில் சங்கரநாராயண சுவாமி- கோமதி அம்பாள் கோயில் ஆடித்தபசு திருவிழாவில் சுவாமி-அம்பாள் காட்சி கொடுக்கும் வைபவம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தென்காசி மேலச்சங்கரன்கோயிலில் ஆடித்தபசு திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமர்சையாக நடத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவிழா கடந்த 11ம் தேதி காலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியை கோயில் அர்ச்சகர் கோமதி நடராஜபட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் ஏற்றி வைத்தனர். விழாவில் தினமும் காலை மாலை வேளைகளில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வந்தது. தினமும் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடந்தது.

விழாவில் முக்கிய நிகழ்வாக நேற்று (21ம் தேதி) மாலையில் சுவாமி, அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து மூன்று முறை மாலை மற்றும் வஸ்திரம் மாற்றும் வைபவம் நடந்தது. தொடர்ந்து சுவாமி சங்கர நாராயணராக கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் ஆடித்தபசு காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. மகா தீபாராதனை நடந்தது.

இதில் கட்டளைதாரர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் முருகன், கோவில் மணியம் மூர்த்தி, திருவிளக்கு பூஜை கமிட்டி தலைவர் இலஞ்சி அன்னையாபாண்டியன், திமுக நிர்வாகிகள் பாலாமணி, ராஜேந்திரன், சங்கரன்வாத்தியார், மேலகரம் சுடலை, அறங்காவலர்கள் இசக்கிரவி, பால்ராஜ், ஜெயலட்சுமி, சுமதி, மோகன்ராஜ், தங்கபாண்டியன், சூர்யா மணி ஈஸ்வரன், அதிமுக நகர செயலாளர் சுடலை, மாரிமுத்து, சுப்புராஜ், கசமுத்து, சாமி, முத்துக்குமாரசாமி, துப்பாக்கி பாண்டியன், கூட்டுறவு சங்கர், பாஜக மாவட்ட துணைத்தலைவர் முத்துக்குமார், நகர தலைவர் மந்திரமூர்த்தி, கவுன்சிலர்கள் சங்கரசுப்பிரமணியன், லெட்சுமண பெருமாள், கருப்பசாமி, ராஜ்குமார், இந்து முன்னணி இசக்கிமுத்து, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் குற்றாலம் பெருமாள், நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் ஈஸ்வரன், கவுன்சிலர்கள் சுப்பிரமணியன், பூமாதேவி, மதிமுக மாவட்ட அவை தலைவர் வெங்கடேஸ்வரன், நகரத்தலைவர் கார்த்திக், கவுன்சிலர் வசந்தி உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முன்னதாக மேலச்சங்கரன் கோவிலில் நேற்று அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

தொடர்ந்து இரவுக்காட்சி நடந்தது. இன்று (22ம் தேதி) மாலை 6 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது. நாளை (23ம் தேதி) மாலை 6 மணிக்கு மேல் ஊஞ்சல் கட்டளை, இரவு 8 மணிக்கு மேல் பைரவர் பூஜை நடக்கிறது.

இதேபோல் தென்காசி கீழச்சங்கரன் கோவிலிலும் ஆடி தபசு திருவிழாவில் நேற்று மாலை மட்டப்பா தெருவில் வைத்து ஆடி தபசு காட்சி நடந்தது. அங்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஎஸ்பி நாகசங்கர், இன்ஸ்பெக்டர்கள் ஜான் பிரிட்டோ, பாலமுருகன்தலைமையிலான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்.

அம்பை: இதேபோல் அம்பை சின்ன சங்கரன்கோயிலில் ஆடித்தபசு காட்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள சின்ன சங்கரன்கோயில் கோமதி அம்பாள் சமேத சங்கரலிங்க சுவாமி கோயிலில் ஆடித்தபசு திருவிழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

10 நாட்கள் நடைபெறும் விழாவில் அம்பாசமுத்திரம் அகஸ்தீஸ்வரர் கோயிலில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10ம் திருநாளான நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு மேல் தீர்த்தவாரி நடந்தது. 11ம் திருநாளான நேற்று ஆடித்தபசு காட்சி கோலாகலமாக நடைபெற்றது.

இதையொட்டி காலை 6.30 மணிக்கு வெள்ளிச்சப்பரத்தில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளினார். மாலை 6 மணிக்கு ஸ்ரீ சங்கர நாராயணர் காட்சி அளித்தார். 6.30 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி அம்பாளுக்கு ரிஷப வாகனத்தில் காட்சி அளித்தார். இரவு 9 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இதை தொடர்ந்து இன்று ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி தெப்ப உற்சவமும், நாளை அம்பை அகஸ்தீஸ்வரர் சுவாமி தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்து இயக்கப்பட்டதால் சேரன்மகாதேவி, விகேபுரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அம்பாசமுத்திரம் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீசார், ஊர்க்காவல் படை மற்றும் தீயணைப்புத்துறை மீட்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் செங்குந்தர் சமுதாய நிர்வாகிகள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Related posts

பேருந்து நிறுத்த நிழற்குடைகளை சீரமைக்க ரூ1 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி தகவல்

கேரளாவில் இருந்து நெட்டா செக்போஸ்ட் வழியாக தனியாக வாகனங்களில் வரும் இளம் சிறார்களுக்கு அனுமதி மறுப்பு?.. காவல் துறையினர் விளக்கம்

வேடசந்தூர் அருகே புரட்டாசியால் பொலிவிழந்த அய்யலூர் ஆட்டுச் சந்தை: பாதியாக குறைந்தது ஆடு விற்பனை