மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, தியாகராய நகர் போன்ற இடங்களில் இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ரூ.5-ம், 4 சக்கர வாகனங்களுக்கு ரூ.20-ம் கட்டணம் வசூலிக்கவும் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஆனால் சென்னை மெரினா கடற்கரையில் மாநகராட்சி விதிகளை மீறி பஸ், வேன்களுக்கு ரூ.400 வரையும், கார்களுக்கு ரூ.100 முதல் ரூ.300 வரையும், 2 சக்கர வாகனங்களுக்கு ரூ.30 வரையும் கட்டணம் வசூலித்ததாகவும், அதற்கு ரசீதும் கொடுப்பதில்லை எனவும் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இது ஒரு புறம் எனில், ஒப்பந்த காலம் முடிந்த நிலையில் மேற்கொண்டு அந்த தனியார் நிறுவனத்துக்கு வழங்கிய ஒப்பந்தத்தை நீடிக்காமல், சென்னை மாநகராட்சி அதிரடியாக ரத்து செய்தது.
இதை எதிர்த்து அந்த தனியார் நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் ‘தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது. எனவே சென்னை மாநகராட்சி சார்பில் சாலையோர வாகன நிறுத்தத்திற்கு மறு டெண்டர் விடும் வரை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், பாண்டி பஜார், தியாகராய நகர் உள்பட மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். இலவசமாக வாகனங்களை நிறுத்திக்கொள்ளலாம். மிரட்டி கட்டணம் கேட்டால் சம்பந்தப்பட்டவர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எனவே மெரினா, பெசட் நகர் கடற்கரைகளில் தற்காலிகமாக வாகனம் நிறுத்தக் கட்டணம் இல்லை என்பது உறுதியாகி உள்ளது.