Thursday, June 27, 2024
Home » ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களின் திருப்பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களின் திருப்பணி முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

by Suresh

சென்னை: ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களின் திருப்பணி முன்னேற்றம் குறித்து அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் இன்று (07.02.2024) ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் முக்கிய திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில்களை புனரமைக்கும் வகையில் ரூ.304.84 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் 197 திருக்கோயில்களின் திருப்பணிகளில் 16 திருக்கோயில்களில் பணிகள் முடிவுற்று குடமுழுக்கு நிறைவு பெற்றுள்ள நிலையில் இதர தொன்மையான திருக்கோயில்களில் நடைபெற்று வரும் திருப்பணிகளின் பணி முன்னேற்றம் குறித்தும், சட்டமன்ற அறிவிப்புகளின்படி புரசைவாக்கம், அருள்மிகு கங்காதீஸ்வரர் திருக்கோயில், நங்கநல்லூர், அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், பெரியபாளையம், அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் தங்கத்தேர் திருப்பணிகள், இருக்கன்குடி, அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருக்கருகாவூர், அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், சென்னை, அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் புதிதாக உருவாக்கப்பட்டு வரும் வெள்ளித் தேர் திருப்பணிகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுக்கு மூத்த குடிமக்களை கட்டணமில்லாமல் அழைத்துச் செல்லும் வகையில் தொடங்கப்பட்டுள்ள அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் இரண்டாம் கட்டப் பயணத்தை 200 பக்தர்களுடன் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலிருந்து தொடங்குவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும், காசி – இராமேசுவரம் ஆன்மிகப் பயணத்தின் அடுத்தக்கட்ட பயணங்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

கடந்தாண்டு மகா சிவராத்திரி பெருவிழாவானது மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயில், தஞ்சாவூர், அருள்மிகு பிரகதீசுவரர் திருக்கோயில், திருநெல்வேலி, அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில், பேரூர், அருள்மிகு பட்டீசுவரர் திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் சிறப்பாக நடத்தப்பட்டதை போல சட்டமன்ற அறிவிப்பின்படி இந்தாண்டு கூடுதலாக மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருவானைக்காவல், அருள்மிகு ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களையும் சேர்த்து 7 திருக்கோயில்களில் வருகின்ற மார்ச் 8ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழாவினை ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடிட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

நிறைவாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் பேசுகையில், சட்டமன்ற அறிவிப்புகளின்படி இந்து சமய அறநிலையத்துறையில் நடைபெற்று வரும் அனைத்துப் பணிகளையும், குறிப்பாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில் திருப்பணிகளை குறித்த காலத்திற்குள் விரைந்து முடித்திட மண்டல இணை ஆணையர்களும், பொறியாளர்களும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஆன்மிகப் பயணங்கள் மற்றும் மகா சிவராத்திரி பெருவிழாக்களை இறையன்பர்கள் மகிழ்ச்சியுறும் வகையில் சிறந்த முறையில் ஏற்பாடு செய்து நடத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர்கள் ந.திருமகள், சி.ஹரிப்ரியா, தலைமைப் பொறியாளர் பி.பெரியசாமி, இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி, இரா.வான்மதி, கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, மாவட்ட வருவாய் அலுவலர்கள் கோ.விஜயா, த.குமரேசன், சு.ஜானகி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

twenty − eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi